/indian-express-tamil/media/media_files/2025/04/29/vLyW6e4d5Zmn3NdbTIuf.jpg)
கேரள அரசு சார்பாக முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருக்கும் தமிழக அரசின் முல்லைப் பெரியாறு அணையின் மூலம் பெறப்படும் தண்ணீரை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மக்களும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அணையை சுற்றுவட்டார பகுதி மக்கள் உபயோகிக்கின்றனர்.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணை செய்தது. அதன்படி, தமிழக கோரிக்கைகளுக்கு மேற்பார்வைக்குழு தீர்வு காணும் கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும், இரு மாநிலங்களும் ஏற்கும்படியாக அந்த தீர்வு இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
இது மட்டுமின்றி தீர்வு காணப்பட முடியாத விவகாரங்களை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த சூழலில் கேரள அரசு தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், "வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது. குறிப்பிட்ட சாலை, மழையாலும், ஆற்று நீர்பெருக்காலும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும், இது வனப்பகுதி என்பதால் அனுமதி அளிக்க முடியாது.
தற்போதைய முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. இதனால், மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
இதற்காக, புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். அணை கட்டுவதற்கான மொத்த செலவையும் கேரள அரசு ஏற்றுக் கொள்ளும். மேலும், அணையை மேற்பார்வையிடும் குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது" என்று பிராமண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.