/tamil-ie/media/media_files/uploads/2017/11/hadiya-sc.jpg)
கேரளாவில் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்த ஹதியா என்ற பெண், இன்று (திங்கள் கிழமை) உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்த அகிலா என்பவர், முஸ்லிம் மதத்திற்கு மாறி ஷஃபீன் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தன் மகள் கட்டாயப்படுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டிருக்கிறார் எனக்கூறி, அவரது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஹதியாவின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தன் மகள் மதவாத குழுக்களால் முஸ்லிம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்பட்டார் என கூறியிருந்தனர். இந்த வழக்கில், ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்து, அவர் தன் பெற்றோர் உடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஹதியாவின் கணவர் ஷஃபீன் ஜஹான், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரியுள்ளார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹதியாவை நவம்பர் 21, அதாவது இன்றைய தினம் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
அதற்காக, ஹதியா டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, டெல்லிக்கு செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹதியா, ”நான் ஒரு முஸ்லிம். என்னுடைய சொந்த விருப்பத்தின்பேரிலேயே முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளேன். முஸ்லிம் மதத்திற்கு மாற என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு நீதி வேண்டும். நான் என் கணவருடன் வாழ வேண்டும்”, என ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, விசாரணை மூடப்பட்ட அறையில் ரகசியமாக நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஹதியாவின் தந்தை அசோகன் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.