கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை ( நவம்பர் - 3) காலை அம்மாநில அதிரடிப்படை போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இளைஞர் ஒருவர் பலியானார்.
கொல்லப்பட்ட நபர், தமிழ்நாட்டின் தேனி மாவட்ட பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (33) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் புகைப்படத்தை தமிழக காவல்துறையும், மதுரையில் வக்கீல் பணி புரியும் வேல்முருகனின் சகோதரர் முருகனும் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
" வேல்முருகன் தமிழகத்தில் தேடப்பட்டுவரும் மாவோயிஸ்டுகளின் பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு , மலப்புரம் ஆகிய வடக்கு மாவட்டங்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கு உதவியது தொடர்பான பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன" என்று போலீசார் தெரிவித்தனர்.
மாநிலத்தின் பிராதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வேல்முருகன் சட்டவிரோத என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணை தேவையென்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காளை வயநாடு காவல் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிரடிப்படை போலீசார் மீது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவிக்கிறது. பதில் தாக்குதலுக்காக போலீசார் திருப்பிச் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்த போது, வேலுமுருகனின் சடலம் கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை சபை எனும் அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான நிர்மல் சாரதி, இந்த சம்பவம் குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தற்காப்புக்காக போலீசார் சுட்டனர் என்ற பதில் மிகவும் "சந்தேகத்திற்குரியது" என்று கூறினார்.
குற்றத்தை மறைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறிய சரதி, ஒரு பொதுவுடைமைக் கட்சி ஆட்சி இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
என்கவுண்டர் நடந்த இடத்திற்கு செல்ல ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மாவோயிச நடவடிக்கைகளின் தன்மை மற்ற மாநிலங்களில் இருக்கும் மாவோயிசத்தில் இருந்து வேறுபடுகிறது. உதாரணமாக, கேரளா மாவோயிசம் ஒருபோதும் பொதுமக்களை குறிவைத்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இல்லை.
கேரளா, தமிழ்நாடு கர்நாடகாவின் சந்திக்கும் தடையற்ற வனப்பகுதி தான், மாவோயிச நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் காடுகள் இந்த முக்கோணத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியமைத்த கடந்த நான்கு ஆண்டுகளில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையில் நடக்கும் நான்காவது நேரடி தாக்குதல் இதுவாகும். இந்த வருடம் மார்ச் மாதத்தில், வயநாடு மாவட்டத்தில், ஓட்டல் ஒன்றில் பணம் பறிக்கும் போது மாவோயிட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பாட்டார் . 2016 ம் ஆண்டு மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நிலம்பூர் காடுகளில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் போலீசாரால் சுடப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபரில் பாலக்காட்டில் நடந்த மோதலில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.