கொல்கத்தா உணவகத்தில் தீ விபத்து: கொல்கத்தாவின் 6 மாடி உணவகத்தில் நேற்று (ஏப்ரல் 29) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. இதில், பெரும்பாலானவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் இருந்து தப்பிக்க கட்டடத்தில் இருந்து வெளியே குதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: At least 14 dead in Kolkata hotel fire, SIT formed to probe cause
"தீ விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை விசாரிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்து வெளியேறும் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நகரின் புர்ராபஜார் பகுதியில் மதன்மோகன் தெருவில் அமைந்துள்ள ரிதுராஜ் விடுதியில், நேற்று இரவு சுமார் 7:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இன்று அதிகாலை 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
போலீசாரின் கூற்றுப்படி, விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அறையை விட்டு வெளியேற முடியாதவர்கள் என்று தெரிகிறது.
படிக்கட்டுகள் மற்றும் நடைபாதைகளில் புகை நிறைந்ததால், உணவகத்தில் தங்கி இருந்தவர்களில் சிலர் மேற்பகுதிக்குச் சென்றனர். இவர்கள் அனைவரையும் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சஞ்சய் பாஸ்வான் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க முயன்ற போது, அவர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்தில் காயமடைந்த பலர் தற்போது கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயை அணைத்த பின்னர் 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உணவகத்தில் தங்கி இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வணிக நடவடிக்கைகளுக்காக வந்தவர்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். தீயணைப்பு படையினர் அனைவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களில் சிலர் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர். இரண்டு குழந்தைகளும் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் சஷி பஞ்சா தெரிவித்துள்ளார்.