/indian-express-tamil/media/media_files/2025/10/24/kurnool-bus-tragedy-2025-10-24-09-19-12.jpg)
ஹைதராபாத் - பெங்களூரு சாலையில் கோர விபத்து: தீக்கிரையான பேருந்து; 12 பேர் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் வியாழன் நள்ளிரவில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த பயங்கர விபத்தில் 12 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். 41 பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த வோல்வோ (Volvo) பேருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த தீ விபத்தில் பஸ்சில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பஸ்சின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
இதையடுத்து, பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். முதற்கட்ட விசாரணையில், பைக் பேருந்தின் மீது மோதியதாகவும், அதனால் பேருந்தின் டீசன் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் சுமார் 40 பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் (X) வெளியிட்டப் பதிவில், "கர்நூல் மாவட்டம் சின்ன தேக்கூர் கிராமம் அருகே நடந்த மோசமான பேருந்து தீ விபத்து பற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் எனது அரசு வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
I am shocked to learn about the devastating bus fire accident near Chinna Tekur village in Kurnool district. My heartfelt condolences go out to the families of those who have lost their loved ones. Government authorities will extend all possible support to the injured and…
— N Chandrababu Naidu (@ncbn) October 24, 2025
பிரதமரின் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டப் பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்ததுடன், இந்தச் சம்பவம் "ஆழ்ந்த துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்டார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டப் பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி (TDP) சட்டமன்ற உறுப்பினர் நாரா லோகேஷ் கூறுகையில், "கர்நூல் மாவட்டம், சின்ன தேக்கூர் கிராமம் அருகே நடந்த இந்த பேரழிவுகரமான பேருந்து தீ விபத்து பற்றிய செய்தி மனதை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கர்நூல் பேருந்து தீ விபத்து குறித்து வேதனை தெரிவித்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ ஆதரவையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
விபத்துக்கான காரணம்
காவேரி டிராவல்ஸ் (Kaveri Travels) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பேருந்தில் 41 பயணிகள் இருந்ததாக கர்நூல் மாவட்ட ஆட்சியர் ஏ.சிரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அதிகாலை 3 மணி முதல் 3:10 மணிக்குள் நடந்துள்ளது. அப்போது ஒரு பைக் பேருந்தின் மீது மோதியதில் டீசல் டேங்க் உடைந்தது. இதனால் ஏற்பட்ட கசிவு மற்றும் உராய்வு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். பேருந்தில் இருந்த 41 பயணிகளில் 21 பேர் காயமின்றி தப்பினர். முதற்கட்ட விசாரணையில், பைக் விபத்துக்குப் பிறகு பேருந்தின் எரிபொருள் டேங்க் வெடித்ததால் தீப்பற்றி, சுமார் 40 பயணிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் - பெங்களூரு வழித்தடத்தில் நடக்கும் 2வது பெரிய பேருந்து தீ விபத்து இதுவாகும். இதற்கு முன், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி, பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்த தனியார் பேருந்து, ஹைதராபாத்தில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் பாலெம் அருகே தீப்பிடித்ததில், அதில் இருந்த 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us