ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான கட்சியின் கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்ப மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப இல்லை. அவரது பொறுப்பற்ற நடத்தை, குடும்ப மதிப்பு மற்றும் பொது ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால், கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து நீக்குகிறேன். கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார். இனிமேல், அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது.
அவர் நல்லது கெட்டது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் வேண்டும். நான் எப்போதும் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பவன். கீழ்ப்படிதலுள்ள குடும்ப உறுப்பினர்கள் பொது வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றனர். என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தேஜ்பிரதாப் யாதவ் முகநூல் பதிவில், இளம்பெண்ணுடன் உறவில் இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் பிறகு தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். நேற்று வெளியிட்ட சமூகவலைதள பதிவில், தனது தோழி அனுஷ்கா யாதவுடனான தனது நீண்டகால உறவை அறிவித்து, அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் சமூகவலைதள பதிவில் பகிர்ந்து குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்தே, தேஜ் பிரதாப் யாதவ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.