ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது. இந்த ஊழல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியிலும் தொடர்ந்தது. அவர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக மீண்டும் முதலமைச்சரான பின்பு கால்நடை தீவன ஊழல் குறித்து அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
இதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் ஆக்கினார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.
வழக்கு விசாரணை பீகாரில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
லாலு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஜெயிலில் தண்டனை அனுபவித்த இரண்டரை மாதங்களில் லாலு பிரசாத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார்.
லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
பிற்பகல் 3.30 மணியளவில் தீர்ப்பளித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்பட 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து லாலு பிரசாத் தனது ட்விட்டரில், "இறுதியில் உண்மை தான் வெல்லும். உண்மையை மறைத்து பொய் உலகத்தை சுற்றி வரலாம். ஆனால், இறுதியில் உண்மையே வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.