இந்திய மொழிகள் இடையே போட்டி இன்றி, ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், மொழிகளின் வாயிலாக தேசத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய முதல் பெண் ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் தமிழ்ப் போராளி ராணி வேலு நாச்சியாரை நினைவு கூறும் விதமாக நடத்தப்பட்ட விழாவில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
"இந்தி பேசும் நபர் தமிழ் மொழியை எதிர்க்க மாட்டார். மாறாக, அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாக வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மை வலிமை மற்றும் ஒற்றுமைக்கான ஆதாரமாக திகழ்கிறது" என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பிரச்சனை நிலவி வரும் நிலையில், இந்தக் கருத்தை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து பாதுகாப்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக தான் காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் எடுத்துரைத்தார். ஒரு மொழியை ஊக்குவிப்பது, மற்றொரு மொழியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
வீரம், தேச பக்தி மற்றும் புத்திசாலித்தனத்தின் சின்னமாக வேலுநாச்சியார் திகழ்கிறார் என்று ராஜ்நாத் சிங் இந்நிகழ்வில் குறிப்பிட்டார். "உண்மையான தலைமை என்பது அதிகாரத்தில் நீடிப்பதில் இல்லை. அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடும் குணத்தில் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
ராணி லட்சுமிபாய், ராணி துர்காவதி மற்றும் ராணி சென்னம்மா ஆகியோரையும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இவர்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகமாக இருக்கிறார்கள் என்று புகழாரம் சூட்டினார். "பெண்கள் அதிகாரம் பெறும் போது அதற்கான பலன்கள் தனி நபர்களை கடந்து தேசத்தை அடையும். சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கங்களில் பெண்கள் பங்கேற்றபோது, இந்தப் போராட்டங்கள் அரசியலைக் கடந்து தேசிய இயக்கங்களாக மாறி, ஒவ்வொரு வீடு, தெரு மற்றும் கிராமத்தை அடைந்தன" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"சமூகத்தில் பெண்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதை உறுதி செய்வது என்பது கொள்கை முடிவு மட்டுமல்ல. வளர்ச்சியடைந்த மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாகும்" என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.