லுட்யென்ஸ் டெல்லி இந்தியாவின் தலைநகரம், நாட்டை நடத்தும் அதிகார வர்க்கத்தின் இருப்பிடம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் பங்களாக்கள், சன்சாத் மார்க்கில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டிடம் கூட அதிகாரப்பூர்வ வன அட்டை வரைபடத்தில் “காடு” என்பது அறியப்படவில்லை.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) வளாகங்களின் சில பகுதிகளும், டெல்லி முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகளும் “காடு” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தியாவின் ஐந்தில் ஒரு பங்கு அரசுப் பதிவுகளில் தொடர்ந்து காடாக உள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் நாட்டின் காடுகளின் நுணுக்கமான தரவுகளை பகிரங்கப்படுத்தவில்லை.
இந்திய வன ஆய்வு (FSI) அதன் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வன அறிக்கைகளில் (SFRs) ஒருங்கிணைந்த தரவுகளை மட்டுமே வெளியிடுகிறது. மேலும் தரவு… ஊடகங்களுக்கு வழங்கப்படக்கூடாது” என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணம் செலுத்திய பிறகு புவி-குறிப்பு வரைபடங்களை வழங்குகிறது.
இந்திய வன ஆய்வின் சமீபத்திய (SFR 2021) வனப்பகுதி தரவுகளின் பகுதிகளின் தரை சரிபார்ப்பு, செயற்கைக்கோள் படங்களின் அதிகாரப்பூர்வ விளக்கத்தின் கீழ் காடு என்று பெயரிடப்படக்கூடிய அனைத்திலும் ஒரு பார்வையை வழங்கியது:
அதில் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட காப்புக்காடு நிலத்தில் தனியார் தோட்டங்கள், தேயிலை தோட்டங்கள், வெற்றிலை பாக்கு தோட்டங்கள், கிராம வீட்டு மனைகள், சாலையோர மரங்கள், நகர்ப்புற குடியிருப்பு பகுதிகள், விஐபி குடியிருப்புகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பகுதிகள் போன்றவை இருந்தன.

வனப்பகுதி பற்றிய இந்தியாவின் வரையறையில் விளக்கம் உள்ளது.
“காடு”க்கான உலகளாவிய தரநிலை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) வழங்கப்படுகிறது: அது குறைந்தபட்சம் 1 ஹெக்டேர் நிலம், குறைந்தபட்சம் 10% மர விதானத்தை உள்ளடக்கியது.
FAO ஒரு காட்டில் “முக்கியமாக விவசாயம் அல்லது நகர்ப்புற நிலப் பயன்பாட்டின் கீழ்” உள்ள பகுதிகளை உள்ளடக்கவில்லை என்றாலும், இந்தியா 10% விதானத்துடன் கூடிய அனைத்து 1 ஹெக்டேர் நிலங்களையும் “நில பயன்பாட்டைப் பொருட்படுத்தாமல்” காடாகக் கணக்கிடுகிறது.
இந்த பரந்த வரையறை, நாட்டின் வனப்பகுதியை உயர்த்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இந்தத் திட்டுகள் வானத்திலிருந்து பச்சை நிறமாகத் தோன்றலாம், ஆனால் அவை காடுகளுடன் நாம் தொடர்புபடுத்தும் பல்லுயிர்களின் ஒரு பகுதியை ஆதரிக்காது. எனவே இது போன்ற உள்ளீடுகள் மூலம் தேசிய கொள்கைகளை தவறாக வழிநடத்துவது குற்றம், என்று முன்னணி சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இந்தியாவின் காடுகளில் சுற்றுச்சூழல் அல்லது பல்லுயிர் மதிப்பு இல்லாத பகுதிகளைச் சேர்ப்பது பற்றி கேட்டதற்கு, FSI இன் டைரக்டர் ஜெனரல் அனூப் சிங், ஊடகங்களிடம் பேசுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று மறுத்துவிட்டார்.
கடந்த வாரம், சுற்றுச்சூழல் செயலாளரின் அலுவலகம், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகள் மூலம் டைரக்டர் ஜெனரலுக்கு (வனம்) கேள்விகளை அனுப்பியது. ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “செயற்கைக்கோள் படங்களின் மூலம் வெவ்வேறு நில பயன்பாடுகள் மற்றும் உரிமையை கண்டறிய முடியாது. வனப்பகுதியை வரைபடமாக்குவதற்கு நாங்கள் பயன்படுத்தும் வரையறை குறித்து நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம். வனப்பகுதி பற்றிய நமது வரையறை ஐ.நா மற்றும் FAO ஆகியவற்றால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நமது மக்கள்தொகை அளவைக் கருத்தில் கொண்டு, நாம் (வனப் பரப்பில்) சில ஆதாயங்களைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மரமும், அது நகர்ப்புறங்களில் இருந்தாலும் அல்லது கிராமத்தில் உள்ள மரங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் இருந்தாலும், முக்கியமானது மற்றும் அது கணக்கிடப்படுகிறது.
இந்தியாவின் காடுகளை இந்திய வன ஆய்வு (FSI) மட்டும் பார்க்கவில்லை. பல ஆண்டுகளாக, பல சுயாதீன ஆய்வுகள் இந்தியாவில் காடுகளின் குறிப்பிடத்தக்க இழப்பை அறிக்கை செய்துள்ளன. 2010 மற்றும் 2021 க்கு இடையில் 1,270 சதுர கிலோமீட்டர் இயற்கை காடுகளை இந்தியா இழந்தது என்று உலக வள நிறுவன தளமான குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில் அடர்ந்த காடுகளில் 2,462 சதுர கிலோமீட்டர் மற்றும் ஒட்டுமொத்த வனப் பரப்பில் 21,762 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளதாக FSI தெரிவித்துள்ளது.
1980-82 ஆம் ஆண்டில், NRSA நிறுவனம் இந்தியாவில் 14.10% காடுகளை மட்டுமே மதிப்பிட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையுடன், அரசாங்கம் இந்திய வன ஆய்வு நிறுவனத்தை (FSI- 1981) ஐ உருவாக்கியது. நீண்ட இழுபறி பேரத்திற்குப் பிறகு (இரண்டு நிறுவனங்களுக்கிடையில்) 1987 இல் 19.52% வனப்பகுதிக்கு தீர்வு காணப்பட்டது, என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நினைவு கூர்ந்தார்.
நாட்டின் காடுகளின் பரப்பை 19.53% என்று வைத்தாலும், இந்திய வன ஆய்வின் முதல் SFR (1987) 10.88% மட்டுமே அடர்த்தியான காடுகளைக் கொண்டுள்ளது என்றும் நிலைமை “உண்மையில் ஆபத்தானது” என்றும் குறிப்பிட்டது.
அதன் பின்னர், SFR 2021 இன் படி இந்தியாவின் அடர்ந்த காடுகளின் பரப்பளவு 12.37% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அதில் இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே மாம்பழங்கள், தென்னந்தோப்புகள், வேளாண் காடுகளின் தடுப்புத் தோட்டங்கள் போன்ற அடர்ந்த பசுமையான திட்டுகள் அடங்கும்.
பதிவுசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் உள்ள காடுகள் – பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட காடுகள் – இவை அடிப்படையில் இயற்கை காடுகள் மற்றும் வனத்துறையின் தோட்டங்கள் என்று பிப்ரவரி 3, 2022 அன்று ராஜ்யசபாவில் அரசாங்கம் தெளிவுபடுத்தியது.
இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட காடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே இன்று காடுகளாக உள்ளது. அதில், அடர்ந்த காடுகள், அரசாங்கத்தால் வளர்க்கப்படும் தோட்டங்களாக இருந்தாலும் கூட அது நாட்டின் 9.96% மட்டுமே.
நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் காடுகளின் பரப்பில் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக இந்த இழப்பு கண்ணுக்கு தெரியாததாகவே உள்ளது மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் இந்தியாவின் மதிப்பீட்டுத் திறனில் செய்யப்பட்ட முன்னேற்றங்களால் இது நியாயப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, தில்லியில், 1997 மற்றும் 2003க்கு இடைப்பட்ட 6 ஆண்டுகளில் காடுகளின் பரப்பு ஆறரை மடங்கு – 26 சதுர கி.மீ முதல் 170 சதுர கி.மீ வரை உயர்ந்துள்ளது.
இதையடுத்து, இயற்கை காடுகளின் இழப்பை ஈடுகட்ட தோட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. 2003 முதல், FSI தரவுகளின்படி, கிட்டத்தட்ட 20,000 சதுர கிமீ அடர்ந்த காடுகள், காடுகள் அல்லாதவையாக மாறியுள்ளன. இது கேரளாவின் பாதி அளவுள்ள பிரதான காடுகளின் மொத்த அழிவைக் குறிக்கிறது.
தரமான இயற்கை காடுகளின் இந்த இழப்பில் பாதிக்கும் மேலானது, 2003 முதல் தொடர்ச்சியாக இரண்டு வருட கால இடைவெளியில் அடர்ந்த காடுகளாக மாறிய கிட்டத்தட்ட 11,000 சதுர கிமீ வனமற்ற பகுதிகளால் ஈடுசெய்யப்பட்டுள்ளது. இவை வேகமாக வளரும் இனங்களின் தோட்டங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இயற்கை காடுகள் அவ்வளவு வேகமாக வளரவில்லை.
எஃப்எஸ்ஐ வரைபடங்களில், ஆக்கிரமிப்பு மற்றும் அழிக்கப்பட்ட வன நிலத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் கூட அடர்ந்த காடுகளாக காட்டப்பட்டுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது.
உதாரணமாக, 1990 களின் நடுப்பகுதியில் இருந்து அசாமின் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பசுமையான ரவுடா காப்புக் காட்டில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர்கள் அழிக்கப்பட்டன. பின்னர், அழிக்கப்பட்ட நிலத்தில் பல தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் தோன்றி இப்போது அடர்ந்த காடாக கருதப்படுகின்றன.
அதேபோன்று, தேயிலைத் தோட்டங்களின் பெரிய பகுதிகள், தேயிலை தோட்டத்தில் அத்தியாவசியமான “நிழல் மரங்கள்” இருப்பதால், திறந்த காடுகளாகக் கணக்கிடப்படுகின்றன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டுபிடித்தது.
குறிப்பிடத்தக்க வகையில், காடுகளின் FAO-UN வரையறை வெளிப்படையாக, மரங்களின் கீழ் பயிர்களை வளர்க்கும் போது வேளாண் காடுகள் அமைப்புகளை, காடுகளிலிருந்து விலக்குகிறது.
சிங்கின் முன்னோடியான எஃப்எஸ்ஐயின் தலைமைப் பொறுப்பில் இருந்த டாக்டர் சுபாஷ் அசுதோஷ், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் “அவசரமாக செய்யப்படும் பரந்த ஆய்வின் போது” “சில தவறுகள் நிகழலாம்” என்றார்.
இந்த இரண்டாண்டு அறிக்கைகளைத் தொடரும்போது, சிறந்த கொள்கை உள்ளீடுகளுக்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு விரிவான மதிப்பீட்டைச் செய்ய ஒரு முன்மொழிவு இருந்தது. அது காகிதத்தில் மட்டுமே இருந்தது. தரவு வெளிப்படைத்தன்மை முக்கியமானது மற்றும் வரைபடங்களை பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்வது குறித்து நாங்கள் விவாதித்தோம்.
ஆனால் என்ஆர்எஸ்ஏவில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட வரைபடங்களை இலவசமாக வழங்க முடியாது, மேலும் மூல தரவுகள் கூட்டு ஆராய்ச்சிக்காக மட்டுமே பகிரப்பட வேண்டும், என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“