மத்தியப்பிரதேச மாநிலம் செமரியாவின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நீலம் மிஷ்ரா. நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், தன்னையும் தன் குடும்பத்தாரையும் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ராஜேந்திர சுக்லா, காவல்துறையினரைக் கொண்டு மிரட்டி வருவதாக பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர சுக்லா. அமைச்சர் சுரங்க ஊழலில் ஈடுபட்டிருப்பதாக சட்டசபையிலேயே நீலம் முன்பு குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தான் தன்னுடைய கணவரையும், குடும்பத்தாரையும் காவல்துறையினர் உதவியுடன் துன்புறுத்திவருவதாக நேற்று சட்டமன்றத்தில் புகார் செய்தார். மேலும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மிரட்டல் இருப்பதால், பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தேவாஸ் பகுதியில் அந்த காவலரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் கணவனை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி நேற்று சட்டமன்ற வளாகத்தில் தர்ணாவிலும் ஈடுபட்டார், நீலம் மிஷ்ரா. இது தொடர்பாக ராஜேந்திர சுக்லா கூறுகையில், “என் மீது பொய்யான குற்றச்சாட்டினை முன் வைத்து, காங்கிரஸ் கட்சியிடம் தன் விசுவாசத்தினை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார், நீலம்’’. மேலும் “என்னுடைய பெயரைச் சொல்லி பிரபலமடைய விரும்புகின்றார்” அவர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவருடைய கணவர் அபேய் மிஷ்ரா சில மாதங்களுக்கு முன்பு தான் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் ரேவா மாவட்டப் பஞ்சாயத்து யூனியனின் தலைவராக இருக்கின்றார். மிக சமீபத்தில் காவல்துறையினரை, அபேய் மிஷ்ராவும் வேறு சிலரும் தாக்கி இருக்கின்றார்கள். அதனால் கூட அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும் சுக்லா தெரிவித்துள்ளார்.