Maharashtra government : என்ன தான் நடக்கிறது மகாராஷ்ட்ராவில். தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்களை நெருங்குகின்ற நேரத்திலும் இந்த கட்சி தான் அல்லது இந்த கூட்டணிக் கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும் என்று எந்த விதமான இறுதி முடிவும் இன்று வரை எட்டப்படவில்லை. திங்கள் கிழமை (11/11/2019) அன்று பாஜகவுக்கு மத்தியில் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் விதமாக தன்னுடைய ஒரே ஒரு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அறிவித்தது சிவசேனா. நேற்று காலை அரவிந்த் சாவந்த் அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி அமைக்க உரிமை கோர இன்னும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று சிவசேனா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்ட கோரிக்கையை அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நிராகரித்துவிட சிவசேனா வைத்திருந்த நம்பிக்கை தளரத் துவங்கியது.
சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்களின் ஆதரவரை அளிக்காததற்கு காங்கிரஸ் கட்சியின் தயக்கமே காரணம் என்று தெரிய வருகிறது. ராமர் கோவில் கட்டுவது, யூனிஃபார்ம் சிவில் கோட் போன்ற விவகாரங்களில் சிவசேனாவின் நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியை சிந்திக்க வைப்பதாக சிவசேனா கட்சியை சார்ந்தவர் அறிவித்தார்.
சிலரோ, இதர கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நேரம் மிகவும் குறைவாக இருப்பதே காரணம் என்று கூறுகின்றனர். அனைத்து என்.சி.பி. எம்.எல்.ஏக்களிடமும் குறித்த நேரத்தில் கையெழுத்து வாங்குவது மிகவும் சிரமமான காரியமாக மைந்துவிட்டது. தங்களுடைய தொகுதிகளில் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏக்களும் இன்று மும்பையில் கூட வேண்டும் என என்.சி.பி. தங்களின் எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநரிடம் கூடுதல் நேரம் கேட்க உத்தவ் தாக்கரேவுக்கு அறிவுரை வழங்கியது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் என்றும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கடிதங்களை சமர்பிக்கவும் மும்பை ஹோட்டலில் தங்கியிருந்த சிவசேனா எம்.எல்.ஏக்கள் இனிப்புகளை பறிமாறி மகிழ்ச்சியைடைந்தனர். கடந்த வியாழக்கிழமை முதல் சிவசேனா உறுப்பினர்கள் அந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைக்க 48 மணி நேரம் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படவும் சிவசேனாவின் கொண்டாட்டங்கள் களையிழக்க துவங்கின. ஞாயிற்றுக் கிழமை பாஜக ஆட்சி அமைக்க மாட்டோம் என்று அறிவித்தவுடன் அம்மாநில ஆளுநர் பகத் சிங், இரண்டாவது பெரிய கட்சியான சிவ சேனாவை திங்கள் கிழமை இரவு 07:30 மணிக்குள் ஆட்சி அமைக்க அழைத்ததார். ஆதித்யா தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், திவாகர் ராவத், அனில் பராப் ஆகியோர் இந்த ஆளுநர் சந்திப்பில் உடன் இருந்தனர்.
ராஜ்பவனில் ஆளுநரிடம் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஆதித்யா தாக்கரே “. 07:30 மணிக்குள் ஆட்சி அமைக்க கேட்டு கொண்டதால் இரண்டு கட்சிகளின் ஆதரவு கடிதங்களை பெற்றவுடன் 06:45 மணிக்கு நாங்கள் ராஜ்பவன் வந்தோம். எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதங்களை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக முடிக்க மேலும் 48 மணி நேரம் அவகாசம் கேட்டோம். ஆனால் அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். கூடுதல் நேரம் தான் நிராகரிக்கப்பட்டதே தவிர, எங்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹோட்டல் பந்த்ராவில் ஆலோசனையில் ஈடுபட்டார் உத்தவ் தாக்கரே. அந்த சந்திப்பில் ஆதித்யா தாக்கரே, சேனா எம்.பி. சஞ்சய் ரௌத், எம்.எல்.ஏக்கள் அஜித் பவார், திலிப் வால்ஸே பாட்டில், எம்.பி. சுனில் தாக்கரே போன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக சோனியா காந்தியிடம் போன் மூலம் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.