/indian-express-tamil/media/media_files/2025/08/18/cpr-2025-08-18-07-50-32.jpg)
நேற்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. செப்டம்பர் 9 அன்று நடைபெறவிருக்கும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நியமித்தது. கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு இதை அறிவித்தார். இது, ஒழுக்கமான மற்றும் அமைதியாக, ஆனால் திறம்படச் செயல்படும் ராதாகிருஷ்ணன் மீது கட்சி வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
பல்லாண்டுகால அரசியல் அனுபவம், கட்சி அமைப்புகளில் கிடைத்த அனுபவம், மற்றும் அதன் மிதமான அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக ராதாகிருஷ்ணனின் இந்த உயர்வு ஒரு ஸ்டாரடஜிக் நகர்வாகக் கருதப்படுகிறது. 2024 பிப்ரவரியில் ஜார்க்கண்ட் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, ராதாகிருஷ்ணன் மற்ற ஆளுநர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு அணுகுமுறையை வெளிப்படுத்தினார். ஆளுநர்கள் அரசியல் சார்புகளைத் தாண்ட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்படுவேன் என்று கூறினார். தனது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து, வளர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் ராதாகிருஷ்ணனின் நீண்டகால நண்பர் ஒருவர் கூறும்போது, “ஜார்க்கண்டில் பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தியது, அரசியல் எல்லைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில முன்னாள் ஆளுநர்களுக்கு ஒரு மறைமுக அறிவுறுத்தலாக இருந்தது” என்று குறிப்பிட்டார். குறிப்பாக, ஆளுநர்களின் செயல்பாடுகள் மீது தென் மாநிலங்கள் அதிருப்தி கொண்டிருந்த நேரத்தில், ராதாகிருஷ்ணனின் இந்த நடுநிலையான அணுகுமுறை முக்கியத்துவம் பெற்றது.
ராதாகிருஷ்ணன் ஒரு கண்டிப்பான, அதேசமயம் செயல்முறை சார்ந்த அரசியல்வாதி என்ற நற்பெயரைப் பெற்றவர். 2023 பிப்ரவரியில் அவர் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, பாஜகவின் முக்கிய போட்டியாளரான தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர், அவரை “தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர்” என்று பாராட்டினார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் அவரை ஒப்பிட்ட அந்தத் தலைவர், “நல்லதோ கெட்டதோ, இங்குள்ள பாஜகவில் அவர் ஒரு நல்ல மனிதர்” என்று கூறியது, அவரது செல்வாக்கு அரசியல் எல்லைகளைத் தாண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம் அவரது இளமைப் பருவத்திலேயே தொடங்கியது. கோயம்புத்தூரின் திருப்பூர் நகரில் பிறந்த அவர், 16 வயதில் ஆர்.எஸ்.எஸ்-ல் இணைந்தார். படிப்படியாக பாஜகவின் முக்கிய பொறுப்புகளுக்கு உயர்ந்தார். 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது, அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு சாதனை. பாஜகவுக்கு சவாலான பகுதியாக இருந்த மேற்குத் தமிழகத்தில் அவர் அடைந்த இந்த வெற்றி, கட்சிக்குள்ளும் ஆர்.எஸ்.எஸ்-க்குள்ளும் அவருக்கு நம்பகத்தன்மையையும் செல்வாக்கையும் பெற்றுத் தந்தது. 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவராகவும், பின்னர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கட்சிக்குள் இருக்கும் அவரது சக ஊழியர்கள், ராதாகிருஷ்ணன் சங்கப் பரிவாரத்தின் சித்தாந்தத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் என்றாலும், நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று விவரிக்கின்றனர். அவரது நேரடி அணுகுமுறையும், நேர்மையான பிம்பமும் அவரைத் தனித்துக் காட்டுகிறது.
இருப்பினும், சர்ச்சைகளில் இருந்து அவர் விலகி இருந்ததில்லை. 2023-ல், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை “ஒழிக்க” வேண்டும் என்று பேசியபோது, ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோதும் ராதாகிருஷ்ணன் கடுமையாக எதிர்வினையாற்றினார். “இந்து மரபுகளை அழிக்க முயற்சிப்பவர்கள் தங்கள் செயலால் அழிவார்கள்” என்று எச்சரித்த அவர், உதயநிதியை “ஆழமான விஷயங்களில் தலையிடும் ஒரு குழந்தை” என்று நிராகரித்தார்.
ஜார்க்கண்ட் ஆளுநர் பதவியில் இருந்து 2024 ஜூலையில் மகாராஷ்டிராவுக்கு அவர் மாற்றப்பட்டது, தற்போது துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது பெயர் அறிவிக்கப்பட்டது என அனைத்தும் அவரது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி போன்ற சில பாஜக ஆளுநர்கள் அரசியல் சார்புடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் நடுநிலையாக இருக்க முயற்சித்தார்.
மகாராஷ்டிராவில் ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சுமூகமான உறவைப் பேணி வருகிறார். சமீபத்தில் சர்ச்சைக்குரிய மகாராஷ்டிரா சிறப்பு பொதுப் பாதுகாப்பு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதைத் திரும்பப் பெறும்படி கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். அவர்களையும் அவர் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரானவர்கள் கூட, ராதாகிருஷ்ணனின் இந்த அணுகுமுறை — பாஜகவுக்கான விசுவாசம், சங்க சித்தாந்தத்திற்கான பற்று, மற்றும் அரசியல் அமைப்பின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றை சமன் செய்யும் அவரது தனிப்பட்ட பாணி கட்சியில் அவருக்கு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்திருப்பதாகக் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.