மும்பையில் இருக்கும் 100 தனியார் கல்லூரிகளுக்கு இலவசமாக பகவத் கீதை புத்தகங்களை தர இருப்பதாக மகாராஷ்ட்ரா கல்வி இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன்படி NAAC A அல்லது A+ தரச்சான்றிதழ்கள் பெற்ற 100 கல்லூரிகளுக்கு பகவத் கீதை அளிக்க இருப்பதாகவும், அதனை பெற்றுக் கொள்ள விரும்பும் கல்லூரிகள் மும்பையில் இருக்கும் உயர் கல்வி இயக்குநரகத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மகாராஷ்ட்ராவின் கல்வி அமைச்சர் வினோத் தவ்தேவிடம் பேசிய போது, “அந்த சுற்றறிக்கையினை நாங்கள் யாருக்கும் வழங்கவில்லை. கல்லூரிகளில் பகவத் கீதையினை தருவது குறித்து எந்தவிதமான முடிவினையும் மகாராஷ்ட்ரா அரசு எடுக்கவில்லை” என்று கூறினார்.
“பக்தி வேதந்தா புத்தக நிறுவனம் தானாக முன்வந்து கல்லூரிகளுக்கு பகவத் கீதையினை வழங்கியிருக்கிறது” என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனம் அரசாங்கத்திடம் “பகவத் கீதையினை கல்லூரிகளுக்கு தர இயலுமா” என்று வினவினார்கள்.
“அரசினால் அப்படி எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாது என்று கூறி மறுத்துவிட்டோம். அவர்கள் விரும்பினால் அவர்களின் நிறுவனத்தின் பெயரிலேயே அதனை கல்லூரிகளில் கொண்டு சேர்க்கலாம் என்று கூறியதால் அவர்கள் இந்த முயற்சியினை மேற்கொண்டனர். பைபிள், அல்லது குரானை கொண்டு போய் கல்லூரியில் தருகிறோம் என்று யாராவது சொன்னாலும் எங்களால் மறுப்பேதும் கூற இயலாது” என்றும் குறிப்பிட்டார்.
மும்பை உயர்கல்வி மையத்தில் இருப்பவர் கூறுகையில், பக்தி வேதந்தா புத்தக நிறுவனம் பகவத் கீதையினை மாணவர்களுக்கும் கல்லூரிகளுக்கும் தர விரும்புவதாக கூறியிருக்கிறது. மாநில அரசு அவர்களிடம் கல்லூரிகளின் பட்டியலை சமர்பித்திருக்கிறது. கல்லூரிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்து பகவத் கீதைகளும் இந்த அலுவலகத்தில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினர் “இந்துத்துவாவை மக்களிடம் திணிக்கிறது இந்த அரசு” என்று குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்கட்சித் தலைவர் ராதகிருஷ்ணன் விகே பாட்டில் இந்த நடவடிக்கைகள் பற்றி சரியான விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார். மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சௌஹான் ”நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம் மதசார்பற்ற தன்மையையே அதிகம் விரும்புகிறது. ஆனால் இந்த நடவடிக்கை காவியை கல்வி நிறுவனங்களுக்குள் நுழைக்கிறது” என்று கூறியுள்ளார்.
மாநில அரசிற்கு ஆதரவாக சிவசேனா உறுப்பினர் நீலம் ஹோர்ஹே குறிப்ப்பிடுகையில் “பகவத் கீதைக்கு எப்படி ஒருவர் எதிர்ப்பு சொல்ல முடியும்?. காரணமே இன்றி ஏன் இப்படி எதிர்கட்சியினர் கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்தி அழுது கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டுள்ளார்.