மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் நகர் பஞ்சாயத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீலின் பேச்சு பாஜக, என்.சி.பி-யின் பரவலான கண்டனத்தையும் மாநில மகளிர் ஆணையத்தின் கோபத்தையும் பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநில குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், தனது தொகுதியில் உள்ள சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பாஜக, என்.சி.பி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மகளிர் ஆணைமும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
“எனது தொகுதியில் நல்ல சாலைகளை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால், எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்…” என்று சிவசேனா அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் நகர் பஞ்சாயத்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய குலாப்ராவ் பாட்டீல், தனது அரசியல் எதிர் கட்சி தலைவரான என்.சி.பி தலைவர் ஏக்நாத் காட்சேவை கிண்டல் செய்தார்: “30 ஆண்டுகளாக எம்எல்ஏவாக பணியாற்றியவர்கள் எனது தரங்காவ்ன் தொகுதிக்கு வர வேண்டும். எனது தொகுதியில் நான் செய்த வளர்ச்சியை அவர்கள் நேரில் பார்க்க வேண்டும். நீங்கள் தரங்கானில் உள்ள சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்களைப் போல இருப்பதைப் பார்க்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வேன்…” என்று கூறினார்.
“இழிவான மற்றும் கண்ணியமற்ற” கருத்துக்களை தெரிவித்ததற்காக மகாராஷ்டிரா மாநில அமைச்சருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தியதற்காக பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக தலைவர் பிரவின் தரேகர் கூறினார்.
மேலும், தனது கருத்துக்காக அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மாநில என்சிபி மகளிர் பிரிவு தலைவரும், மகளிர் ஆணையத் தலைவருமான ரூபாலி சகங்கர் கூறுகையில், “ஒரு மக்கள் பிரதிநிதியாக, பாட்டீலின் பேச்சு பெண்களை மிகவும் இழிவுபடுத்துவதாகவும், அமதிப்பதாகவும் உள்ளது. அத்தகைய ஒப்பீடு செய்வதன் மூலம், அவர் தனது சொந்த மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தியுள்ளார்… அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நாங்கள் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.
பாஜகவின் மகளிர் பிரிவு பொதுச் செயலாளர் உமா கப்ரே கூறுகையில், அமைச்சர் பாட்டீல், ஹேமமாலினியின் பெயரை விவாதத்தில் இழுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.
இதனிடையே, அமைச்சர் பாட்டீலின் கருத்துகளுக்கு பதிலளித்த காட்சே, மக்கள் அவரை 30 ஆண்டுகளாக தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அவர் அவர்களுக்காக உழைத்தார் என்றே அர்த்தம் என்று அவர் கூறினார்.
அமைச்சர் மன்னிப்பு கேட்டதையடுத்து இந்த விவகாரம் முடிக்கப்பட்டது என்று என்.சிபி கூறியது. ஆனால், அமைச்சர் பாட்டீலுக்கு எதிராக பாஜக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இன்னும் யோசித்து வருவதாக கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”