ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் அதிருப்தி அடைந்துள்ள தெலுங்கு தெசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கின. காங்கிரஸ் கட்சியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்தது.
ஏற்கனவே 3 கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மான நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில், ஆளும் பாஜகவுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி மக்களவை செயலகத்தில் நோட்டீஸ் வழங்கி இருந்தது. ஆனால், தொடர் அமளி நிலவியதால் இந்தத் தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 16ஆவது நாளாக இன்றும் முடங்கியது. தெலுங்கு தேசம், அதிமுக எம்பிக்களின் அமளியால் மக்களவை மாநிலங்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பதாக புகார் தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு, அதிமுகவுடன் கூட்டு வைத்துள்ளது. அவையை முடக்க அதிமுகவை பாஜக தூண்டி விடுகிறது. பாஜக.வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அதிமுக அவையை முடக்குகிறது என்று கூறிய கார்கே, அரசுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ‘மேட்ச் பிக்சிங்’ இருக்கிறது என தெரிவித்துள்ளார்.