கர்நாடக மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கா் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் மற்றும் பிரதான குற்றவாளியான 24 வயதான முகமது ஷாரிக் ஆகியோர் தீயில் கருகி காயமடைந்தனா். இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் என்று அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன், கடைக்காரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அவர்களைக் காப்பாற்ற முயன்றதாக தெரிவித்தனர்.
மாலை 4.45 மணியளவில் பலத்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், அந்த வழியாகச் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததாகக் கருதினர். இன்னும் சிலர் ஆட்டோ ரிக்ஷாவின் கேஸ் டேங்க் வெடித்ததாக நினைத்தனர்.
ஆட்டோ டிரைவர் பயணியை தனது வாகனத்தில் இருந்து வெளியே தள்ள முயன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
ஆட்டோவில் இருந்து வெளியே தள்ளப்பட்ட இளைஞர் (சந்தேக நபர்) ஓடியபோது, அவரது உடலின் பல பகுதிகளில் சதை தொங்கிக் கொண்டிருந்தது என்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த மங்களூருவில் கரோடியில் உள்ள கட்டிடத்தின் காவலாளி வில்சன் நினைவு கூர்ந்தார்.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, பயணியின் (பயங்கரவாதியின்) முகம் தீப்பற்றி எரிந்திருந்தது, மேலும் தீ விபத்து காரணமாக இயர்போன் அவரது உடலுடன் ஒட்டியிருந்தது. ஆட்டோ ஓட்டுநருக்கு தலை மற்றும் முதுகில் தீக்காயங்கள் இருந்ததாக வில்சன் கூறினார்.
அருகில் வசிக்கும் தன்ராஜ் ஷெட்டியும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் மற்றவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று எங்களிடம் கூறினர். மேலும் பயணியின் ஆடைகள் தீப்பிடித்ததால் நாங்கள் மணலையும் சேற்றையும் அவர் மீது வீசினோம், என்று அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரது கால் உடைந்துள்ளதாகவும் ஷெட்டி கூறினார். ஆட்டோரிக்ஷாவின் பின் இருக்கையில் இருந்த பிரஷர் குக்கரைப் பார்த்த பிறகுதான் வெடிவிபத்துக்கான காரணம் குறித்து மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இளைஞன் மோசமான நிலையில் இருந்தான், என்று அருகிலுள்ள சிக்கன் கடைக்காரர் முஸ்தபா கூறினார், அவனது கை விரல்கள் உடைந்து, இடது கண் சேதமடைந்தது.
எங்களில் பலர் அவர்களின் உதவிக்கு விரைந்தோம். அவ்வழியே சென்ற இரண்டு ஆட்டோரிக்ஷாக்களை நிறுத்தி ஃபாதர் முல்லர்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். வெடிகுண்டு வெடிப்பு என்று அதிகாரிகள் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை நாங்கள் உணர்ந்தோம், என்று அவர் கூறினார்.
பயணியை காப்பாற்ற முயற்சித்த ஆட்டோ ஓட்டுநருக்கு காயம்
சிவபெருமானின் வடிவமாகக் கருதப்படும் ஸ்வாமி கோரகஜ்ஜாவின் பக்தரான புருஷோத்தம் அவரது நண்பர்களிடையே நல்ல மனிதராக அறியப்பட்டவர்.
சக ஆட்டோ டிரைவரான லோகேஷ் கூறுகையில், 60 வயது புருஷோத்தம், சந்தேகத்திற்குரிய பயணியை மங்களூருவில் உள்ள பாடில் அருகே ஏற்றி, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பம்ப்வெல்லில் இறக்கிவிடச் சென்றார்.
புருஷோத்தம் சமீபத்தில் இதய நோயால் அவதிப்பட்டதாக லோகேஷ் கூறினார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தூரத்து உறவினரான உதய் கூறுகையில், பயணிக்கு உதவ அவர் முயற்சித்த போதுதான் அவருக்கு பெரும்பாலான காயங்கள் ஏற்பட்டன என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.