காங்கிரஸ் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி மிரட்டுவதாக ஜனாதிபதி ரம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், அசோக் கெலாட், கமல்நாத் உள்ளிட்டவர்கள் கையெழுத்து இட்டு இன்று (மே 14) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் காதுகளை திறந்து வைத்து தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்’ என மோடி பேசிய வீடியோவை மையமாக வைத்து காங்கிரஸ் புகார் கொடுத்து உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கடிதத்தில், ‘பிரதமர் மோடி கர்நாடக மாநில தேர்தலின்போது எங்களை மிரட்டும் வகையில் பேசினார். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தேர்தலின் போது பிரதமர் மோடி மிரட்டும் வகையில் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது. பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது’ என கூறியுள்ளனர்.
மேலும், ‘இந்தியாவில் முன்னதாக பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் பொது மற்றும் தனியார் கூட்டங்களில் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி விடுத்து உள்ள எச்சரிக்கையானது கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பு முறையில் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஜனநாயக நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர் இதுபோன்ற வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது. பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மிகவும் அவமதிப்பதாகவும், அமைதியை குலைப்பதாகவும் உள்ளது’ என மன்மோகன் சிங் மற்றும் பிற தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங், ஏகே அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ப.சிதம்பரம், அசோக் கெலட், மல்லிகார்ஜுன கார்கே, கரண் சிங், அம்பிகா சோனி, கமல் நாத், ஆனந்த் சர்மா, மோதிலால் வோரா, திக்விஜய் சிங், முகுல் வாஸ்நிக் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்து இட்டிருக்கிறார்கள்.
‘காங்கிரஸ் அல்லது பிற அரசியல் கட்சி தலைவர்கள், தனிநபர்களுக்கு எதிராக தேவையில்லாத மற்றும் மிரட்டும் வகையிலான வார்த்தைகளை பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி எச்சரிக்கை விடுப்பார் என நம்புவதாக’ காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.