Goa CM Manohar Parrikar death: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் இறந்ததையடுத்து, அங்கு பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.
அவர் இறந்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக இரு அரசியல் குழுவினரால், இரண்டு மீட்டிங்குகள் நடந்து விட்டன.
தங்கள் அரசாங்கம் இனி நிச்சயமில்லை என்பதை உணர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் யூனியன் மினிஸ்டர் நிதின் கட்கரிக்காக காத்திருந்தனர்.
கோவாவின் மற்றொரு பகுதியில், கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் கவ்லேகரை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
பா.ஜ.க, ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தக் கூடும் என்ற அச்சம் காங்கிரஸிடம் இருந்தது. சபாநாயகர் பிரமோத் சாவந்த் இடைக்கால முதலமைச்சராக நியமிக்கப் படலாம் என்ற பேச்சும் எழுந்தது.
மனோகர் பாரிக்கர் மற்றும் கடந்த பிப்ரவரியில் ப்ரான்சிஸ் டிசோசா என இரு சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்திருக்கிறார்கள். 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகியிருக்கிறார்கள்.
கோவா சட்டப் பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பது காங்கிரஸ் தான். இதில் மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மகாராஷ்ட்ரவடி கோமண்டக் கட்சியும், கோவா ஃபார்வர்டு கட்சியும் தலா 3 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். என்.சி.பி கட்சி 1 எம்.எல்.ஏ, 3 சுயேட்சை எம்.எல்.ஏ என மொத்தம் 36 சட்டமன்ற உறுப்பினர்கள் கோவாவில் உள்ளனர்.
மகாராஷ்ட்ரவடி கோமண்டக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை பாரிக்கர் பெற்றிருந்தார். ஆனால் பாரிக்கருக்கு மட்டும் தான் தாங்கள் ஆதரவு என தெளிவாக இருக்கிறார்கள் அவர்கள்.
இந்நிலையில் பாரிக்கரின் மறைவையடுத்து, கோவா மாநிலத்தின் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்று ஆளுநர் மிருதுளா சின்காவுக்கு காங்கிரஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவாவில் அடுத்து காங்கிரஸா இல்லை மீண்டும் பா.ஜ.க-வா என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.