/indian-express-tamil/media/media_files/2025/05/10/kP1Ch5fuRVuF74cJRAJW.jpg)
கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தானின் நடவடிக்கைகள் "தூண்டிவிடும் மற்றும் தீவிரப்படுத்தும்" வகையில் இருப்பதாக மத்திய அரசு இன்று (மே 10) தெரிவித்துள்ளது. மேலும், பஞ்சாபில் அமைந்துள்ள விமானப்படை தளங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் இந்தியாவில் 26 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் இராணுவம் தனது துருப்புக்களை எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, இந்தியா பதிலடி தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 5 மணியளவில் அமிர்தசரஸ்க்கு மேலே பல பாகிஸ்தான் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், "எதிரிகளின் திட்டங்களை முறியடிப்போம்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வட இந்தியா முழுவதும், அதிகாலை நேரத்தில் பல்வேறு நகரங்களில் வெடிகுண்டு சத்தம் கேட்டது. ஜம்முவில், பாகிஸ்தான் படைகள் விமானப்படை தளத்தை தாக்க முயன்றதால் அவ்வப்போது வெடிகுண்டு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ரஜோரியில் கடுமையான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஷெல்கள் முக்கிய நகரப் பகுதியில் விழுந்தன. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ மையமான பதான்கோட்டில் அதிகாலை பல குண்டு வெடிப்புகள் பதிவாகின. பதிலுக்கு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகம் உயர் எச்சரிக்கை விடுத்து, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிட்டது. இதனால் வீதிகள் முழுவதும் நிசப்தம் நிலவியது.
ஸ்ரீநகரில் விமான நிலையத்திற்கு அருகே அதிகாலை 5 மணிக்குப் பிறகும், பாரமுல்லா மற்றும் உதம்பூரிலும் இதே போன்ற காட்சிகள் அரங்கேறின. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள ராணுவ நிறுவல்களை குறிவைத்து பாகிஸ்தான் இரண்டாவது நாளாகவும் ட்ரோன்களை ஏவியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய வான் பாதுகாப்புப் படைகள் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய போதிலும், ஆயுதம் ஏந்திய ஒரு ட்ரோன் பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, காஷ்மீரில் உள்ள பாரமுல்லா முதல் குஜராத்தில் உள்ள புஜ் வரை 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் காணப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. ஸ்ரீநகர், ஜம்மு, பெரோஸ்பூர், பதான்கோட், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் போன்ற முக்கிய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது அச்சுறுத்தலின் புவியியல் பரவலை எடுத்துக்காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.