/indian-express-tamil/media/media_files/2025/06/10/4vqTAVVhiyh396DBhDrn.jpg)
மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புதுமண தம்பதியில் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சோனம் ரகுவன்ஷி, தான் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காஜிபூருக்கு கொண்டு வரப்பட்டதாக உத்தர பிரதேச காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா (28) மற்றும் சோனம் ஆகியோர் கடந்த மே மாதம் மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற நிலையில் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இந்த மாதம் ராஜாவின் சடலம் கொலைக்கான ஆயுதத்துடன் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், சோனம் ரகுவன்ஷி தற்போது சரணடைந்துள்ளார்.
உத்தர பிரதேச காவல்துறையினர் வெளியிட்ட தகவலின்படி, காஜிபூர் மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சோனம் ரகுவன்ஷி, தான் காஜிபூருக்கு எப்படி வந்தேன் என்று தெரியவில்லை என்றும், தனக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
திங்களன்று, மத்திய பிரதேச காவல்துறையின் குற்றப்பிரிவு, ராஜாவின் கொலை சம்பவம், ராஜ் குஷ்வாஹா (21) மற்றும் சோனமின் உதவியுடன் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியது. இத்தம்பதி திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே ராஜாவின் கொலையை குஷ்வாஹா திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது உணவகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். சோனம் (24), திங்கள்கிழமை அதிகாலையில் அந்த உணவகத்தில் இருந்து தனது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர்.
"காஜிபூரில் உள்ள உணவகத்திற்கு தான் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை என்றும், யார் தன்னை அங்கு கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை எனவும் சோனம் கூறினார். இதில் இருக்கும் உண்மைத் தன்மையை கண்டறிய, உணவகத்திற்கு அருகில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் மக்களும், உணவக உரிமையாளரும், அந்தப் பெண் தனியாக வந்ததாகவும், சுயநினைவுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டதாக அந்த அதிகாரி கூறினார். தற்போது வரை, வேறு யாராவது அவரை உணவகத்திற்கு கொண்டு வந்ததற்கான எந்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அமிதாப் யாஷ் கூறுகையில், மேகாலயா காவல்துறையினர் கோரினால், உ.பி. காவல்துறை அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று தெரிவித்தார்.
போலீசார் கூற்றுப்படி, சோனம் ரகுவன்ஷி திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் காஜிபூரில் நந்த்கஞ்ச் பகுதியில் உள்ள காஷி உணவகத்திற்கு வந்துள்ளார். இந்தூரில் உள்ள தனது குடும்பத்தினரை அழைப்பதற்கு ஒரு தொலைபேசியை கேட்டுள்ளார். தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க விரும்புவதாகவும் உணவக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
பின்னர் சோனம் தனது உறவினருக்கு வீடியோ அழைப்பு விடுத்து, காஜிபூரில் உள்ள ஒரு உணவகத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவரது உறவினர் உடனடியாக இந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை உ.பி. போலீசாருக்கு, இந்தூர் போலீசார் அனுப்பியுள்ளனர். உடனடியாக உ.பி. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே, அசாதாரணமாக உணர்ந்த உணவக உரிமையாளரும், சோனம் குறித்து புகாரளிக்க போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். காஜிபூரில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.
சோனம் ரகுவன்ஷி தனது அடையாளத்தை போலீசாரிடம் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். தனக்கு காய்ச்சல் இருப்பதாக அவர் கூறியதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் ஒரு 'ஒன்-ஸ்டாப் சென்டருக்கு' மாற்றப்பட்டார். இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காலிக தங்குமிட வசதியாகும். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.