ஊடகங்கள் முன்பு நாங்கள் மீண்டும் பேசினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக, அவர்கள் வீட்டுக்காவலில் உள்ள நிலையில், மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் இல்திஜா தெரிவித்துள்ளதாவது, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நாங்கள் பணயக்கைதியாக வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். ஊடகங்களிடம் பேசினால், மோசமான விளைவுகளுக்கு உள்ளாவோம் என்று அச்சுறுத்துகின்றனர்.
நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை, சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவள் நான். என்னை வீட்டைவிட்டு வெளியே செல்ல பாதுகாப்புப்படை வீரர்கள் அனுமதிப்பதில்லை. எந்த சட்டத்தின் அடிப்படையில் நாங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என்பதை விளக்க வேண்டும்.
காஷ்மீர் முழுவதும் இருள்மேகங்கள் சூழ்ந்துள்ளன. மாநில மக்களின் பாதுகாப்பு குறித்து எண்ணவே மிகவும் அச்சமாக உள்ளது. எங்கள் மாநிலத்தில் நீண்ட நாட்களாக தடையுத்தரவு அமலில் உள்ளது. தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நாளில், நாங்கள் மிருகங்கள் போல கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளோம். அடிப்படை மனித உரிமைகள் கூட எங்களுக்கு மறுக்கப்படுவதாக, இல்திஜா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.