கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் முதல்வராவதற்குத் தயாராக இருப்பதாக 'மெட்ரோ மேன்' இ ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அவர் பாஜகவில் சேருவது குறித்து விருப்பம் தெரிவித்த ஒரு நாள் கழித்து, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
பாஜகவில் சேருவதற்கு முன்னதாக, கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தை கடன் வலையில் இருந்து வெளியேற்றி, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
மேலும், எந்தவொரு அதிகாரமும் இல்லாத அரசியலமைப்பு பதவியில் மாநிலத்திற்கு பங்களிக்க முடியாது என்பதால் ஆளுநர் பதவியில் ஆர்வம் இல்லை என்று ஸ்ரீதரன் கூறினார்.
‘மெட்ரோ மேன்’ இ. ஸ்ரீதரன் விரைவில் கட்சியில் சேரப்போவதாக பாஜகவின் கேரள தலைவர் கே.சுரேந்திரன் வியாழக்கிழமை அறிவித்தார்.
88 வயதான ஸ்ரீதரன், பிப்ரவரி 21ம் தேதி சுரேந்திரன் தலைமையிலான மாநிலம் தழுவிய சுற்றுப்பயணமான விஜய யாத்ராவின்போது முறையாக கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஸ்ரீதரன் தனது முடிவு, பாஜக மட்டுமே மாநிலத்திற்கு நன்மைகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையால் ஏற்பட்டது என்று கூறினார்.
கேரளாவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்ட ஸ்ரீதரன், “ஆளும் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் இரண்டு கட்சியினரும் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்காகவே செயல்படுகிறார்கள்” என்று கூறினார். “வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் புகைப்படங்களுடன் விளம்பரங்கள் இருக்கின்றனர். ஆனால், அதன் தாக்கம் களத்தில்... இல்லை” என்று அவர் குற்றம் சாட்டினார்.
“நீங்கள் கேரள சூழ்நிலையை ஆராய்ந்தால், பாஜக மட்டுமே மாநிலத்திற்கு நன்மைக்ளை அளிக்க முடியும் என்பதை நான் பார்க்கிறேன். சிபிஐ(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் ஆகியவை தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்காக செயல்படுகின்றன. பாஜக மட்டுமே நாட்டின் நலனுக்காகவும் மாநிலத்துக்காகவும் செயல்படுகிறது” என்று கூறினார்.
டெல்லி மெட்ரோவை ஒரு பொதுப் போக்குவரத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைப்பதில் ‘மெட்ரோ மேன்’ என்று பிரபலமாக அறியப்பட்ட ஸ்ரீதரன், இந்திய பொறியியல் சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி, அதோடு இந்தியாவில் பல மெட்ரோ திட்டங்களுக்கு ஆலோசகரும் ஆவார்.
ஸ்ரீதரன் உறுதியான போக்குவரத்து தொடர்பான ஐக்கிய நாடுகளின் உயர் மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
மக்கள் பயணிக்கும் வழியை மாற்றுவதில் அவர் செய்த பணிக்காக ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச கௌரவங்களைப் பெற்றுள்ளார். 2001ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2008-ல் பத்ம விபூஷன் விருது வழங்கி பாராட்டப்பட்டார். 2005ம் ஆண்டில் அவருக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியர் டி லா லெஜியன் டி ஹொன்னூர் விருது வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டில் டைம் பத்திரிகை ஆசியாவின் ஹீரோக்களில் ஒருவர் என்று அழைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"