கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் பல செயல்பாடுகளைத் திறக்க கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி பிறப்பித்த வழிகாட்டுதல்களை, அடுத்த மாதம் இறுதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Advertisment
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , " கடந்த செப்டம்பர் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்குப்பின், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கிய சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்து, விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு நீச்சல் குளங்களை திறப்பது, 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறப்பது, சமூக/கல்வி/விளையாட்டு/ பொழுதுபோக்கு/கலாச்சார/ மத நிகழ்ச்சிகளில் அரங்கத்தின் கொள்ளவில் 50 சதவீதம் மற்றும் 200 பேர் உச்சவரம்புடன் கலந்து கொள்ள அனுமதி போன்ற நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டன. எனவே, கொரோனா நோய்த் தொற்று பரவல் வாய்ப்பு அதிகம் உள்ள சில நடவடிக்கைகளில், நிலைமைக்கேற்ப தளர்வுகள் குறித்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளே முடிவு எடுக்க தற்போது, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் 100க்கும் மேற்பட்டவர்களை அனுபதிப்பது போன்றவை இதில் அடங்கும்" என்று தெரிவித்தது.
முன்னதாக, பீகாரில் சட்டப்பேரவை தேர்தலும், மேலும் சில மாநிலங்களில் இடைத் தேர்தல்களும் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
கூட்டங்கள் நடைபெறும் இடம் அரங்கங்களாக இருந்தால், இருக்கைகளில் மட்டுமே நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப் படவேண்டும் என்றும், திறந்தவெளி கூட்டமாக இருந்தால், 200க்கும் மிகாமல் மைதானத்தின் இட வசதிக்கேற்ப பங்கேற்பாளர்களை அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
Advertisment
Advertisements
கோவிட்-19 மேலாண்மைக்கான தேசியளவிலான உத்தரவுகள், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும், நவம்பர் 30ம் தேதி வரை, கட்டுப்பாட்டு மண்டலங்களில் முடக்க கால விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்தது.
மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநிலங்கள் தங்கள் இணையதளங்களில் தெரிவித்து, அதை மத்திய சுகாதாரத்துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே மாநிலங்கள் எந்த உள்ளூர் முடக்கத்தையும் அமல்படுத்தக் கூடாது என்றும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 30ம் தேதி வரை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்படாத சர்வதேச பயணிகளின் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படும்.
பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் கூடும் சில நடவடிக்கைகளுக்கு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளுடன் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், வணிக வளாகம், ஹோட்டல், உணவு விடுதிகள் , வழிபாட்டு தலங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி மையங்கள், சினிமா அரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காகத்தான், படிப்படியான மறுதிறப்பு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதன் மூலம் தொற்று முடிந்து விட்டதாக அர்த்தம் அல்ல என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil