/tamil-ie/media/media_files/uploads/2019/06/DSC02610-9.jpg)
mhrd
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும். இந்த பரிந்துரையை ஏற்று இந்தியை கட்டாயமாக்கினால் எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்கட்சிகள் விமர்சித்தனர். இந்த மும்மொழி கொள்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் பதிவாகின.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் வரும் 22ம் தேதி புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய, மாநில கல்வித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றன. ஆலோசனையின் போது அனைத்து தரப்பில் இருந்து வரும் ஒருமித்த கருத்துக்களை வைத்து புதிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிமுக அமைச்சர்களாகிய அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் இடம்பெறாது என உறுதிப்பட தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைப்பெறவிருக்கும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.