/indian-express-tamil/media/media_files/2025/10/18/finance-2025-10-18-12-59-53.jpg)
நிதியமைச்சகம், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை, முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளான ரூ. 73.68 கோடியிலிருந்து வெறும் ரூ. 1 லட்சம் என்று கடுமையாக குறைத்தது. இந்தக் குறைப்பு நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, மத்திய அரசின் முதன்மையான கிராமப்புற பயிற்சி நிறுவனமான தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்துக்கு மீண்டும் நிதி அளிக்குமாறு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் தற்போது வலியுறுத்தி வருகிறது.
நிதியமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு குறைப்பைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, ரூ. 992.26 கோடி நிதியை வழங்குவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை நாடி, அக்டோபர் 13-ஆம் தேதி ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதில், ரூ. 992.26 கோடியில் ரூ. 575 கோடியை நிரந்தர நிதியாக ஒதுக்கவும், ரூ. 417.26 கோடியை ஓய்வூதிய பொறுப்புகளை சமாளிக்க ஒதுக்கவும் குறிப்பிட்டிருந்தது.
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் 1958-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது அரசின் கிராமப்புற வளர்ச்சிக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சியின் உச்ச நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கிராமப்புற மேம்பாட்டு மேலாண்மை மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு மேலாண்மை திட்டங்களையும் நடத்துகிறது.
இது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்திற்கான ஒரு ஆலோசனை அமைப்பாகவும் செயல்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தை நிதி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் படிப்படியாக அமைச்சகத்திலிருந்து துண்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் ஆண்டு பட்ஜெட்டில் 25 சதவீதம் குறைப்புடன், மூன்று ஆண்டுகளுக்குள் இந்த துண்டிப்பு செயல்முறையை அரசு நிறைவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான், நிதியமைச்சகம் 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்திற்கான ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்தது. இந்த நிதி நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் பிரதமரின் அலுவலகத்துடன் நடத்திய பல சுற்று கூட்டங்களைத் தொடர்ந்து இந்தக் குறைப்பை மீண்டும் சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், ஊழியர் சங்கம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர். கடந்த ஜூலை மாதம், ஊரக வளர்ச்சி தொடர்பான நிலைக்குழு இந்த விஷயத்தில் தலையிட்டு, நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் மற்றும் அதற்குப் பதிலாக புதிய நிர்வாகத்தை நியமிக்க வேண்டும் என்று வலுவாகப் பரிந்துரைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.