புதுச்சேரியில் நடத்தப்பட்ட போர்க்கால ஒத்திகை நிகழ்வில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்தது.
இந்த சூழலில் இந்தியா தரப்பில் இருந்து 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே, நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான தளம் அருகே போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒத்திகையில் ராணுவத்தினர், கப்பல் படை வீரர்கள், கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள், மாநில போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் என சுமார் 1000 பேர் வரை ஈடுபட்டனர்.
இதில், போர் காலத்தில் மக்களை எப்படி காப்பாற்றுவது, அவர்களுக்கு காயம் ஏற்பட்டால் எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்பன உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி