/indian-express-tamil/media/media_files/2025/05/10/miQr7KnHPTKzbJNpYZxe.jpg)
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மே 10), இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் "முழுமையான மற்றும் உடனடி" தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்,
ஆங்கிலத்தில் படிக்க: India Pakistan Ceasefire LIVE News Updates: Modi in top-level huddle with Jaishankar, Rajnath, defence brass hours after ceasefire announcement
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தாக்குதல் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முழுமையான மற்றும் உடனடி தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொது அறிவையும் சிறந்த அறிவாற்றலையும் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "இந்த போர் நிறுத்தத்தில் ஈடுபட கடினமாக உழைத்த மற்றும் விருப்பம் தெரிவித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அதிபரின் குழுவினருக்கும், வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோவுக்கும் எனது நன்றி" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் அமெரிக்க, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "கடந்த 48 மணி நேரத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன், குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் ஆசிம் மாலிக் ஆகியோருடன் வான்ஸ் மற்றும் நான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடி தாக்குதல் நிறுத்தத்திற்கும், நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், "மோதல் தணிப்பு முயற்சிகள் அனைத்தையும் வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த தாக்குதல் நிறுத்தம், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த மத்தியஸ்தம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சமாதான முயற்சி, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான உறவை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 10, 2025) தனது இல்லத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை சார்ந்த மிக முக்கிய நபர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும், முப்படைகளின் ஒருங்கிணைப்பாளரும் தலைமை பாதுகாப்புப் படை அதிகாரியுமான ஜெனரல் அனில் சௌஹான் மற்றும் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளின் தளபதிகளும் இந்த முக்கியமான ஆலோசனையில் இடம்பெற்றுள்ளனர். புதுடெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.