Who chose Mamallapuram for Modi - Xi Jinping Informal summit: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று, வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள பழமையான நகரமான மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடையே முறைசாரா உச்சி மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த முறைசாரா உச்சி மாநாட்டிற்கு, மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீன அதிபர் ஜி ஜின்பிங்தான் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இது பரவலாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, முறைசாரா உச்சி மாநாட்டுக்கு இடத்தையார் தேர்வு செய்தது யார் என்பது குறித்து அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோகலே, “இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் இன்று 90 நிமிடங்கள் இரு தலைவர்களும் உரையாடினர். இரு நாட்களும் சேர்த்து இருவரும் 6 மணிநேரம் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. மேலும், மகாபலிபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடி தான்” என்று கூறினார்.
விஜய் கோகலே, மகாபலிபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடிதான் என்று விளக்கம் அளித்திருப்பதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.