/indian-express-tamil/media/media_files/2025/10/02/mohan-bhagwat-2-2025-10-02-19-32-35.jpg)
தனது வருடாந்திர விஜயதசமி உரையில், சங்கத்தின் நூற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல், "நமது கடமைகள்" குறித்த சுயபரிசோதனையாகவும் அமைய வேண்டும் என்று பகவத் வலியுறுத்தினார். Photograph: (PTI)
ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் நூற்றாண்டு விஜயதசமி நிகழ்வில், அதன் தலைவர் மோகன் பகவத், காஷ்மீர் பயங்கரவாதம், இந்தியாவின் அண்டை நாடுகளின் நிலை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தற்சார்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு உட்படப் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்துப் பேசினார். இதுவே "பாரதத்தின் எழுச்சிக்கான பார்வை" என்று அவர் குறிப்பிட்டார்.
நாக்பூரில் நடந்த தனது வருடாந்திர விஜயதசமி உரையில், கடந்த கால நிகழ்வுகள் “நமது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வலுப்படுத்தியுள்ளன” என்றும், அதேசமயம் எதிர்காலத்திற்கான புதிய சவால்களையும் தெளிவுபடுத்தியுள்ளன என்றும் பாகவத் கூறினார். சங்கத்தின் நூற்றாண்டு விழா, கொண்டாட்டங்களுடன் மட்டுமல்லாமல் "நமது கடமைகள்" குறித்த சுயபரிசோதனையாகவும் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் உரையின் ஐந்து முக்கியப் அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
1. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், வெளிநாட்டு நட்புறவுகளைச் சோதித்தல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த எல்லையோர பயங்கரவாதத் தாக்குதலைக் (இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்) குறிப்பிட்ட பகவத், இந்தச் சம்பவமும் அதன் பின்விளைவுகளும் இந்தியச் சமூகத்தின் உறுதியையும், உலகளாவிய ஒற்றுமையில் உள்ள பிளவுகளையும் வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நிகழ்வு “உலக அரங்கில் நமது நண்பர்கள் யார், அவர்கள் எந்த அளவிற்கு நமக்குத் துணை நிற்கத் தயாராக உள்ளனர்” என்பதையும் காட்டியுள்ளது. பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய ஒருமித்த கருத்து முறிந்திருக்கும் பின்னணியில், இந்தியாவின் இராஜதந்திரம் விழிப்புணர்வுடனும், யதார்த்த அரசியலுடனும் இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் வலியுறுத்துவதாக இது பார்க்கப்படுகிறது.
2. ‘நக்ஸல் இயக்கம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’
உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்துப் பேசிய பகவத், இடதுசாரி தீவிரவாதம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், அது மீண்டும் எழுவதைத் தடுக்க வளர்ச்சி அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைகள் மற்றும் நக்ஸல் சித்தாந்தத்தின் வெற்றிடத்தைப் பற்றிய மக்களின் புரிதல் காரணமாக, தீவிரவாத நக்ஸல் இயக்கம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். “இந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதிகளில் நீதி, வளர்ச்சி, நல்லெண்ணம், பச்சாதாபம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்த ஒரு விரிவான செயல் திட்டம் தேவை” என்றார்.
3. அதிகரிக்கும் சமத்துவமின்மையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி
தற்போதைய பொருளாதார அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகளைப் பாகவத் சுட்டிக் காட்டினார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி மற்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் புதிய வழிமுறைகள் குறித்து அவர் எச்சரித்தார்.
“நிலவி வரும் பொருளாதார அமைப்பின் குறைபாடுகள், அதாவது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அகலமாகும் இடைவெளி, பொருளாதார அதிகாரத்தின் குவிப்பு, சுரண்டுபவர்களால் எளிதில் சுரண்ட வழிவகுக்கும் புதிய வழிமுறைகளை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் சீரழிவு, மற்றும் உண்மையான உறவுகளுக்குப் பதிலாக வணிகத்தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை அதிகரிப்பு ஆகியவை உலகளவில் வெளிப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகளைச் சுட்டிக்காட்டி, தற்சார்புக்கு (சுதேசி மற்றும் ஸ்வாவலம்பன்) மாற்றீடு இல்லை என்று பாகவத் வலியுறுத்தினார். இந்த வலியுறுத்தல் அரசின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்துடன் ஒத்துப் போகிறது.
4. இமயமலையில் சுற்றுச்சூழல் நெருக்கடி
“பொருள்முதல்வாத மற்றும் நுகர்வுக் கலாச்சார” வளர்ச்சி மாதிரியின் விலைக்கு எதிராக எச்சரித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர், இமயமலைப் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு கவனத்தை ஈர்த்தார்.
“பாரதத்திலும், இதே மாதிரியின் காரணமாக, வழக்கத்திற்கு மாறான மற்றும் கணிக்க முடியாத மழைப்பொழிவு, நிலச்சரிவுகள், பனிப்பாறைகள் வறண்டு போதல் போன்ற விளைவுகள் கடந்த 3-4 ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளன... இமயமலையில் இந்தச் சீரழிவுகள் நிகழ்வது பாரதத்திற்கும் தெற்காசியாவின் பிற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக கருதப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
இமயமலையை "பாதுகாப்புக் கவசம் மற்றும் நீராதாரமாக " அவர் குறிப்பிட்டது, இந்த நெருக்கடி தெற்காசியா முழுவதும் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற காலநிலை விஞ்ஞானிகளின் கருத்துடன் ஒத்துப்போகிறது.
5. அண்டை நாடுகளில் அரசியல் குழப்பம் மற்றும் ஜனநாயகப் பாதை
தெற்காசியாவில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்துப் பேசிய பாகவத், நேபாளம் முதல் இலங்கை வரையிலான அண்டை நாடுகளில் நடக்கும் வன்முறைத் தெருப் போராட்டங்கள் பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கலாம் என்று எச்சரித்தார்.
“பொதுமக்களின் கோபத்தின் வன்முறை வெடிப்பு காரணமாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் நமக்கு ஒரு கவலையாகும்... வன்முறை வெடிப்புகளால் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. சமூகம் ஜனநாயக வழிமுறைகள் மூலம் மட்டுமே அத்தகைய மாற்றத்தை அடைய முடியும்” என்று அவர் கூறினார்.
அண்டை நாடுகளை “நமது சொந்தக் குடும்பத்தின் ஒரு பகுதி” என்று அழைத்த அவர், இந்த நாடுகளில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது, நமது நலன்களைப் பாதுகாப்பது என்பதையும் கடந்து, நமது இயற்கையான பிணைப்பிலிருந்து எழும் ஒரு அவசியம் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.