மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி புதன் கிழமை, நடிப்பு என்பது அவருக்கு விருப்பமானது என்றும், படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அவரால் வாழ முடியாது என்றும் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Madras Day: How Madras was founded and why it became Chennai
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுரேஷ் கோபி, கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.பி-யாக திருச்சூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுரேஷ் கோபி சுற்றுலாத் துறை அமைச்சராகவும் உள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கோபி, “திரைப்படம் என்பது எனது விருப்பம். படம் இல்லாவிட்டால் நான் இறந்துவிடுவேன். ஒட்டக்கொம்பன் படத்தில் நடிக்க அனுமதி கேட்டுள்ளேன். எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை, ஆனால், செப்டம்பர் 6-ம் தேதி நான் ஒட்டக்கொம்பன் தொடங்குகிறேன்.” என்று கூறினார்.
“சுமார் 20 முதல் 22 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். எத்தனை படங்கள் நிலுவையில் உள்ளன என்று என்னிடம் கேட்டபோது, அமித்ஷாவிடம் (மத்திய உள்துறை அமைச்சர்) நான் சுமார் 20 முதல் 22 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கூறினேன். அவர் (அமித்ஷா) அந்தக் கடிதத்தைத் தூக்கி எறிந்தார்... நான் எப்போதும் என் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவேன். ஆனால், திரைப்படம் தான் என் விருப்பம், இல்லையென்றால், நான் இறந்துவிடுவேன்” என்று சுரேஷ் கோபி கூறினார்.
“அமைச்சர் வேலையைச் செய்ய, நான் மூன்று அல்லது நான்கு பேரை அமைச்சகத்திலிருந்து (படப்பிடிப்பின் போது) அழைத்துச் செல்வேன். நான் அவர்களுக்கு ஒரு கேரவனைக் கொடுப்பேன்... அதன் காரணமாக அவர்கள் என்னைத் திருப்பி அனுப்பினால், நான் தப்பித்துவிட்டதாக உணர்கிறேன். அப்போது திருச்சூர் மக்களுக்காக எனக்கு அதிக நேரம் கிடைக்கும்... அமைச்சரவை பதவி தனிப்பட்ட முறையில் எனக்கு வழங்கப்படவில்லை. பா.ஜ.க-வைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எனது பதவி ஒரு பரிசு...” என்று சுரேஷ் கோபி கூறினார்.
“திருச்சூருக்கு மத்திய அமைச்சர், இது மோடியின் உத்தரவாதம்” என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்ட கோபி, கேபினட் பதவிக்கான அணுகுமுறையால் கட்சியை சங்கடப்படுத்தினார். இந்த ஆண்டு ஜூன் மாதம், மத்திய அமைச்சராகப் பதவியேற்றவுடன், சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம், “நான் எம்.பி-யாக பணியாற்ற விரும்புகிறேன். எனக்கு அது (அமைச்சரவை பதவி) வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அதில் (அமைச்சரவை பதவி) எனக்கு விருப்பமில்லை என்று (கட்சியிடம்) கூறியிருந்தேன். விரைவில் நிம்மதி அடைவேன் என்று நினைக்கிறேன். திருச்சூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். எம்.பி.யாக சிறப்பாக செயல்படுவேன். எனக்கு படங்களில் நடிக்க ஆசை. கட்சி முடிவு செய்யட்டும்” என்றார்.
ஆனால், விரைவில் அவர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார், “மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருப்பதும், கேரள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்குப் பெருமையளிக்கிறது.” என்று சுரேஷ் கோபி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“