பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் தொடர்ந்து ஏதாவது தவறான கருத்துகளை சொல்லி கெட்ட பெயர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். ராஜஸ்தான் (Rajasthan) மாநில பாஜக தலைவர் மதன் லால் ஷைனி சமீபத்தில் பாபர் பற்றியும் ஹூமாயூன் பற்றியும் தவறான வரலாற்று தகவல்களை பதிவு செய்து மாட்டிக் கொண்டார்.
அல்வார் மாவட்டத்தில் மாடுகளை கடத்திச் செல்ல வந்தவர்கள் என்று எண்ணி இருவரை தாக்கியுள்ளார்கள் அவ்வூர் மக்கள். அதில் ரக்பர் என்ற ஒருவர் தாக்குதலில் உயிரிழந்தார்.
அது தொடர்பாக ஜெய்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ஷைனி, ஒவ்வொரு இன மக்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும். ஹூமாயூன் மரணிக்கும் தருவாயில் இருந்த போது, பாபரை அழைத்து, "இந்த நாட்டினை கைப்பற்ற வேண்டுமெனில் இங்கு இருக்கும் பசுக்கள், பிராமணர்கள் மற்றும் பெண்களை மதித்து நடக்க வேண்டும்.
அம்மூன்றுக்கும் கலங்கம் ஏற்பட்டால் அதை ஒரு போதும் இந்துஸ்தான் ஏற்றுக் கொள்ளாது" என்று கூறியதாக ஷைனி பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் ஔரங்கசீப் என்னும் இஸ்லாமிய இறையில் பெரிதும் நம்பிக்கை உடையவர் கூட பசுவைக் கொல்வதை பாவம் என்று பசுக்கொலைகளை அவருடைய ஆட்சியில் தடை செய்துள்ளார்.
ஆனால் அவர்களை பின்தொடரும் இம்மக்கள் பசுக்களை கொலை செய்கிறார்கள் மற்றும் கடத்திச் செல்கிறார்கள் என்று கூறினார் ஷைனி. இறந்து போன ரக்பர் பற்றி பேசும் போது, இது ஒரு துயர சம்பவம். எந்த பிரச்சனைகளையும் சரி செய்யவே குடியாட்சியில் சட்டங்கள் இயற்றப்பட்டுகின்றன. யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.
துரதிர்ஷ்டவசம் என்பது என்னவென்றால் ஹூமாயூனின் தகப்பனார் தான் பாபர். பாபர் இறந்து 25 வருடங்கள் கழித்தே 1556ல் ஹூமாயூன் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.