இந்தியப் பிரதமர் மகிழ்ச்சியடைவாரா அல்லது கோபப்படுவாரா என்று கவலைப்படாமல் அச்சமின்றி கருத்துக்களை வெளிப்படுத்தி வாதிடக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு தேவைப்படுவதாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் ஜூலை 28 அன்று இறந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஜெய்பால் ரெட்டியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜோஷி இவ்வாறாக தெரிவித்தார்.
பாஜக மூத்தத் தலைவர் தெரிவிக்கையில்"அத்தகைய தலைவருக்கு இன்று ஒரு தீவிர தேவை இருப்பதாக நான் உணர்கிறேன், கொள்கைகளின் அடிப்படையில் பயமின்றி, பிரதமர் மகிழ்ச்சியடைவாரா அல்லது கோபப்படுவாரா என்று கவலைப்படாமல் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும், அவருடன் வாதிட வேண்டும்."
1990 களில் ரெட்டியுடனான தனது தொடர்பை நினைவு கூர்ந்த முர்லி மனோகர் ஜோஷி, "அறிவுசார் சொத்துரிமை தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தானும், ரெட்டியும் உறுப்பினராக இருந்தோம். இறுதிவரை, எந்த பிரச்சினையாய் இருந்தாலும், அவர் ஒவ்வொரு மட்டத்திலும் தனது கருத்தை வெளிப்படுத்துவார்"என்றார். ஐ.கே. குஜ்ரால் அரசாங்கத்தில் எஸ்.ஜெய்பால் ரெட்டி அமைச்சரான பிறகும், நாடாளுமன்றத்திக் குழுவின் கருத்துக்களை பிரதமரிடம் வெளிப்படையாக தெரிவிக்கும் பழக்கம் ரெட்டியிடம் எப்போதும் இருக்கும் என்றும் ஜோஷி கூறினார்.
ஜோஷி 1991 மற்றும் 1993 க்கு இடையில் பாஜக தலைவராக இருந்த போது, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஏக்த யாத்திரையை நடத்தியபோது நரேந்திர மோடி அந்த யாத்திரையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை நினைவுக் கூட்டத்தில் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மன்மோகன் சிங் பேசுகையில் "ரெட்டி தனது அரசியல் வாழ்க்கையில் நீதிக்காக நின்றதாகவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் எதை நம்பினாலும் சமரசம் செய்யாமல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்" என்று கூறினார்.
இடதுசாரி கட்சிகள் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா, ஷரத் யாதவ் மற்றும் காங்கிரசின் அபிஷேக் சிங்வி ஆகியோரும் ஜெய்பால் ரெட்டியின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.