டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி பாஜக எம்பிக்களை சரமாரிமாக கலாய்த்து தள்ளியுள்ளார்.
பத்திரிக்கையாளர் கரண் தாபர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (25.7.18) மாலை நடைப்பெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிஜேபியின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
முதலில் விழாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாக அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின்பு மேடை ஏறிய ராகுல் காந்தி பிஜேபி எம்பிக்களை கலாய்த்தும், பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது குறித்தும் பல்வேறு கருத்துக்களை கூறினார்.
விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது, “ இப்போதெல்லாம் பா.ஜனதா எம்.பி.க்கள் எனக்கு எதிரில் வந்தால், 2 அடி பின்னால் தள்ளி நிற்கிறார்கள். எங்கே நான் கட்டிப்பிடித்து விடுவேனோ என்று பயந்து அப்படி செய்கிறார்கள். நாம் ஒருவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். அவருடன் போரிடலாம். ஆனால், அவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டைப் பற்றிய அத்வானி கருத்தும், என் கருத்தும் வேறு வேறானது. அதற்காக அவருடன் சண்டையிட்டாலும் வெறுக்க வேண்டியது இல்லை. அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும், சண்டையிடவும் முடியும். எந்த வித வெறுப்பண்ர்ச்சியும் இல்லாமல் பாஜக அரசை எதிர்கொள்ள நாங்கள் தயார். ஆனால் மோடி அரசு அதற்கு தயாரா? ”என்றும் கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு விழாவில் கைத்தட்டல்கள் பறந்தன.