/tamil-ie/media/media_files/uploads/2018/01/download.jpg)
ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 12-ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குருஷேத்ரா மாவட்டம், ஜன்சா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 9-ஆம் தேதி வீட்டிலியிருந்து டியூஷனுக்கு சென்றபோது காணாமல்போனார். இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை ஜிண்ட் மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் கால்வாய் அருகே அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, அச்சிறுமியின் தந்தை தெரிவித்ததாவது, “என் மகளை கண்டுபிடிக்க காவல் துறையினர் 3 நாட்கள் ஏன் எடுத்துக்கொண்டனர்? காவல் துறையினர் விரைந்து செயல்பட்டிருந்தால் என் மகள் உயிருடன் இருந்திருப்பார். என் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள். எங்களுக்கு நீதி வேண்டும். எங்களால் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. ஆனால், என் மகளை கொலை செய்தவர்களை காவல் துறையினர் சிறைக்கு அனுப்ப வேண்டும்”, என கூறினார்.
இந்நிலையில், அச்சிறுமியின் ஜன்சா கிராமத்தை சேர்ந்த 6 பேரை இக்கொலை தொடர்பாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், சிறுமியின் அருகே வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் தான் இக்கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அவன் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.