புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் பின்னணி உள்ளது. இந்த கொலைக்கு பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறாத நிலையில் எஸ்.எஸ்.பி கலைவாணன் அரசியல் பின்னணி இல்லை என்று கூறுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவருக்கு தனது கண்டனம் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி இன்று செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எமர்ஜென்சி நிலை வந்து விட்டது என்று ஆளுநர் ரவி தமிழகத்தை பற்றியும் முதலமைச்சரை பற்றியும் விமர்சித்துள்ளார். மாநில அரசுக்கு ரவி தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசை செயல்பட விடாமல் முடக்குகின்ற வேலையை செய்து வரும் அவர் எமர்ஜென்சி பற்றி பேசலாமா?
தமிழக ஆளுநர் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்திருந்தால் ஆளுநர் ரவி அன்றைய தினமே பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். புதுச்சேரி அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு கொடுப்பதை பயன்படுத்தி அவருக்கு பா.ஜ.க சாயம் பூச நினைக்கிறார்கள், தமிழிசை சவுந்தர்ராஜன் இருக்கும்போது எவ்வாறு ஆளுநர் மாளிகையை பா.ஜ.க அலுவலகமாக மாற்றினார்களோ அதுபோன்று முயற்சி நடைபெறுகிறது. இது போன்ற விவகாரங்களை ஒருபோதும் ஆளுநர் ஏற்றுக் கொள்ளக் கூடாது,தொடர்ந்து அவர் மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் தற்போது சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக நடமாடுகிறது எஸ்ட்டோபார்கள் அதிக அளவில் உள்ளன மாநிலத்தில் மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தொடர்ந்து நிலம் அபகரிப்பு, வீடு அபகரிப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது காவல்துறை இதற்கு துணை போகிறது. இதில் ஆளுங்கட்சி சேர்ந்தவர்கள் தலையீடு உள்ளது. பட்டப்பகலில் கொலைகள் நடக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பது இல்லாத நிலையை உருவாக்கப்பட்டுள்ளது,
புதுச்சேரியில் ரவுடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் தாராளமாக உலா வருகிறார்கள். காவல்துறை அலுவலகம் ஆனது கட்டப்பஞ்சாயத்து அலுவலகமாக மாறி வருகிறது. சிவில் வழக்குகளில் எல்லாம் காவல்துறை தலையிடுகிறது, லஞ்சம் தாண்டவம் ஆடுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.
பா.ஜ.க பிரமுகர் உமாசங்கர் படுகொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். இந்த சம்பவம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கடந்த 22 ஆம் தேதி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்து இருக்கிறார். இது சம்பந்தமாக லாஸ்பேட்டை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவர் மறுபடியும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் சம்பந்தமாக கேட்கும் போது, விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் உமா சங்கரின் தந்தை காசிலிங்கம் அவருடைய துணைவியாரும் மகளும் முதலமைச்சர் ரங்கசாமியை நான்கு முறை அலுவலகத்தில் சந்தித்து, உமா சங்கருக்கு கொலை மிரட்டல் உள்ளது உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை உமா சங்கர் கொடுத்த புகாரை ஏன் விசாரிக்கவில்லை. காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்? எதனால் விசாரணை நடைபெறவில்லை? ஏன் அந்த குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை? ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம்.
இதிலிருந்து உமா சங்கரின் கொலை திட்டமிட்ட படுகொலை என்பது தெரிய வருகிறது. இதில் அரசியல் பின்னணி இருக்கிறது. உமா சங்கர் கொலை வழக்கை புதுச்சேரி போலீசார் விசாரணை செய்தால் நியாயம் கிடைக்காது, முழுமையான விசாரணை நடைபெறாத நிலையில், எஸ்.எஸ்.பி கலைவாணன் அரசியல் பின்னணி இல்லை என்று கூறுகிறார். அவருடைய பேட்டி அதிர்ச்சியை தருகிறது. இதற்கான காரணம் என்ன?
எனவே காவல்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த கொலைக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் நேர்மையான விசாரணை நடைபெற துணைநிலை ஆளுநர் தலையிட்டு இந்த வாழ்க்கை சி.பி.ஐ-க்கு பரிந்துரைக்க வேண்டும்" என்று நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி.