Advertisment

நாராயண்பூர் வன்முறை: தாக்குதலுக்கு பயந்து விளையாட்டு அரங்கத்தில் தங்கியிருக்கும் கிறிஸ்தவர்கள்

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் உள்ள தேவ்கான் கிராமத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சுக்லு பொடாய் (16), கடந்த வாரம் பெரியவர்களிடம் இருந்து எச்சரிக்கப்பட்டதை அடுத்து அவருடைய தாய் மற்றும் 3 உடன்பிறந்தவர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

author-image
WebDesk
New Update
Narayanpur protest, Narayanpur violence, Narayanpur tension, Chhattisgarh church vandalised, Narayanpur church vandalised, Chhattisgarh violence, communal harmony, Chhattisgarh news

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் உள்ள தேவ்கான் கிராமத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சுக்லு பொடாய் (16), கடந்த வாரம் பெரியவர்களிடம் இருந்து எச்சரிக்கப்பட்டதை அடுத்து அவருடைய தாய் மற்றும் மூன்று உடன்பிறந்தவர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

Advertisment

“கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கையை விட்டுவிடுங்கள் அல்லது கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர். என் தந்தை பின்வாங்கினார். ஆனால், நாங்கள் வெளியேற முடிவு செய்தோம்” என்று கூறிய சுக்லு பொடாயின் குரல் அவருடைய குரல் காலியாக இருந்த பேட்மிண்டன் மைதானத்தின் சுவர்களில் மோதி எதிரொலித்தது.

கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத பழங்குடியினர் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து கான்கேர் மாவட்டத்தில் உள்ள பட்பால், குல்ஹாட்கான் மற்றும் போரவாண்ட் ஆகிய குறைந்த பட்சம் மூன்று கிராமங்களில் இருந்து வெளியேறி கடந்த மாதம் முதல் நாராயண்பூரில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் 36 குழந்தைகள் உள்பட 125 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த 16 வயது கோண்ட் சிறுவன் சுக்லு.

நாராயண்பூர் காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களில், இரு குழுக்களுக்கு எதிராக குறைந்தது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 7 வழக்குகள் பெரும்பான்மை பழங்குடியின குழுக்களின் உறுப்பினர்கள் மீது கிறிஸ்தவர்களைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 18-ம் தேதி நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பழங்குடியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே தங்கள் சக கிராம மக்கள் துன்புறுத்தியதாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி, தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தினர்.

நாராயண்பூர் ஆட்சியர் அஜீத் வசந்த் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களில், சுமார் 375 பேர், மாவட்ட நிர்வாகம் கிராமத் தலைவர், பழங்குடியினர் மதத் தலைவர் மற்றும் பல கிராமங்களில் தலைவராக இருக்கும் படேல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்களின் கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும், பொடாய் குடும்பம் உட்பட சுமார் 31 குடும்பங்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு மிகவும் பயந்து உள்விளையாட்டு அரங்கத்திலேயே தங்கியுள்ளனர்.

“இந்த 125 பேரையும் நாங்கள் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பெரியவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி அவர்களின் கிராமங்களுக்கு அனுப்ப இருந்தோம். ஆனால், ஜனவரி 2-ம் தேதி வன்முறை வெடித்தது மற்றும் தேவாலயம் தாக்கப்பட்டது. எனவே, இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் வருவதால், இடம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.” என்று மாவட்ட ஆட்சியர் அஜீத் வசந்த் கூறினார்.

publive-image

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள 68 கிராமங்களின் தலைவர்கள் வன்முறைக்கு எதிராக திங்கள்கிழமை உறுதிமொழி எடுத்தனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாராயண்பூரில் இந்துக்கள் 92.38 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 0.43 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். நாராயண்பூர் மாவட்டத்தின் மக்கள்தொகையில் பழங்குடியினர் 90 சதவீதத்திற்கு மேல் இருப்பதாக நிர்வாகம் கூறுகிறது.

நாராயண்பூரில், மதமும் நம்பிக்கையும் ஒரு சிக்கலான சமூக மேட்ரிக்ஸின் ஒரு பகுதியாகும் - ஆழமான தனிப்பட்ட ஆனால் தவறான வரிகளால் நிறைந்துள்ளது. பல குடும்பங்களில் கிறித்தவத்தைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் தனிப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர், பலர் தங்களை பழங்குடியினராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் மதம் மாறவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களின் புதிய நம்பிக்கை பெரும்பாலும் மருத்துவ அவசரநிலைகள், குடும்பப் பதட்டங்கள் அல்லது சமூகப் புறக்கணிப்பு போன்ற ஆழமான தனிப்பட்ட நெருக்கடிகளிலிருந்து உருவானது.

நாராயண்பூர் ஸ்டேடியத்தில் தங்கியிருக்கும் 16 வயதான பொடாய், 2014-ம் ஆண்டு அந்த மாவட்டத்தில் உள்ள மாலிங்கனாரில் தனது அத்தை வீட்டுக்கு தங்கச் சென்றபோது, தான் முதன்முதலில் கிறிஸ்தவத்தில் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். “என் அப்பா நிறைய குடிப்பார், எங்களைக் கவனிப்பதில்லை. என்னோடு உடன்பிறந்தவர்கள்5 பேர். ஒருவர் குழந்தையிலேயே இறந்துவிட்டார். என் அம்மா மீண்டும் கர்ப்பமாக இருந்தபோது, ​​அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். சிரா (பழங்குடி மருத்துவர்) அவருக்கு மருந்துகளைக் கொடுத்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. மாலிங்கனார் கோண்டி தேவாலயத்திற்குச் செல்லும் என் அத்தை, இயேசுவிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். விரைவில், என் அம்மா நன்றாக உணர்ந்தார். என் சகோதரி பிறந்தார். என்னைப் போலவே என் அம்மாவும் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். என் தந்தைக்கு கிறிஸ்தவத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், நாங்கள் இயேசுவை நம்புவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற கிராமவாசிகளின் அழுத்தம் காரணமாக அவர் எங்களை ஆதரிக்கவில்லை.” என்று கூறினார்.

9-ம் வகுப்பு படிக்கும் பொடாய் பள்ளி செல்ல முடியாமல் தவிக்கிறார். ஜனவரி 1 முதல், அவர் தனது தாயார், 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு வயது சகோதரருடன் முகாமில் தங்கியுள்ளார். அவருடைய மற்ற இரண்டு உடன்பிறப்புகளும் விடுதிப் பள்ளிகளில் தங்கிப் படிக்கிறார்கள்.

நாராயண்பூர் நகரத்திலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள போரவண்ட் என்ற கிராமத்தில், சுமார் 23 குடும்பங்கள் வெளியேறி தற்போது உள்விளையாட்டு அரங்கத்தில் தங்கியுள்ளனர். இரு பழங்குடியின குழுக்களுக்கு இடையேயான மோதல்களைத் தொடர்ந்து பயமும் சந்தேகமும் ஆழமாக உள்ளன.

பெயர் குறிப்பிட விரும்பாத கிராமப் பெரியவர் ஒருவர் கூறுகையில், “அந்த மக்கள் கிறிஸ்தவத்தை நம்பினால், அவர்களை இங்கே இருக்க விடமாட்டோம். அவர்களுக்கு எங்கள் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. உதாரணமாக, நாங்கள் பழங்குடி வழக்கப்படி, பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே ஒரு சடங்கு கூட - கெய்தா இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், அவர்கள் கெய்தாவை அழைப்பதை நிறுத்திவிட்டனர். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள குழாயைத் தொடவோ அல்லது கிணற்றின் அருகே வரவோ கூடாது. ஆனால், இந்த மக்கள் கேள்விகளைக் கேட்கவும் இந்த விதிகளை மீறவும் தொடங்கியுள்ளனர். எங்கள் பழங்குடி கலாச்சாரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நாங்கள் இந்துவோ அல்லது வேறு எந்த மதத்தினரோ அல்ல. கிறிஸ்தவம் அவர்களின் நோயைக் குணப்படுத்தியது என்றால், ஏன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்? அவர்கள் எப்படி ஈர்க்கப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.” என்று கூறினார்.

அவர்கள் தங்கள் சக கிராமவாசிகள் சிலரைத் தாக்கி, அவர்களைத் தப்பி ஓடச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், “முனித் சலாமைத் தவிர வேறு யாரையும் நாங்கள் தாக்கவில்லை. ஏனென்றால், அவர் கிறிஸ்தவத்தைப் பின்பற்றத் தொடங்கியவர்களில் முதன்மையானவர். அவர் மதத்தைப் பரப்ப மாட்டார் என்று எங்களுக்கு உறுதியளித்தார். ஆனால், படிப்படியாக, பலர் கிறிஸ்தவத்தை நம்பத் தொடங்கினர்” என்று கூறினார்.

நாராயண்பூர் ஸ்டேடியத்தில் தங்கி இருக்கும் முனித் சலாம் (25) இந்த தாக்குதல் குறித்து பேசுகையில், “நவம்பரில் ஒரு கூட்டம் கூடியபோது சிக்கல் தொடங்கியது. நாங்கள் எங்கள் நம்பிக்கையை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். நாங்கள் முடியாது என்று சொன்னோம். பல கிராம மக்கள் என்னை அடித்து பல்லை உடைத்தனர். போலீசார் என்னை காப்பாற்றி முகாமுக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு, நான் எனது கிராமத்திற்கு போகவில்லை. எனது மனைவியும், மூன்று மாத பெண் குழந்தையும் அவர்களின் பாதுகாப்பிற்காக தனியாக தங்கியுள்ளனர்.” என்று கூறினார்.

கிறித்தவ மதத்தைப் பின்பற்றுபவருக்கு அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்ட சம்பவம் மோதலுக்கு வழிவகுத்த போரவாண்டின் பக்கத்து கிராமமான பட்பால் நகரில் பதற்றம் அதிகமாக உள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பழங்குடியின தலைவர் கூறுகையில், “அவர்கள் நம்பிக்கையை கைவிடும் வரை நாங்கள் அவர்களை கிராமத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எங்கள் தேவி-தேவதையை நம்புவதை நிறுத்திவிட்டார்கள். பிரசாதம் சாப்பிடுவதில்லை. எங்கள் ‘சிரா’கூட கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது சங்கடமாக உள்ளது” என்று கூறினார்.

சத்தீஸ்கர் மாநில கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் அருண் பன்னாலால் கூறுகையில், “வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு மறுவாழ்வு அளித்து இழப்பீடு வழங்க வேண்டும். சத்தீஸ்கரில் உள்ள 22 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கிறிஸ்தவர்கள் கடந்த ஆண்டில் இருந்து இதுவரை துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment