நாட்டு மக்கள் தங்கள் பயணச் செலவில் 5 சதவீதத்தை தாங்கள் செல்லும் பகுதிகளில் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு செலவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் பிரார்த்தனை செய்த பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மானா கிராமத்தில் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய மோடி, உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் உள்ளூர் சுயஉதவி குழுக்களின் முயற்சிகளை பாராட்டினார்.
இன்று, நம் நாட்டைப் பாதுகாக்கும் எல்லைக் கிராமத்திற்கு வந்திருக்கிறேன். சீன எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள பயணிகள், தங்கள் பயணச் செலவில் குறைந்தது 5 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்குவதற்குச் செலவிடுவதாக உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உள்ளூருக்கான குரல்' பற்றி நான் பேசுவதைப் போலவே, இந்த உறுதிமொழிக்காகவும் நான் பேசுகிறேன். என்னால் உத்தரவிட முடியாது, ஆனால் நான் கோரிக்கை வைக்க முடியும். இது உள்ளூர் தயாரிப்புகளுக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும். மேலும் உங்களுக்கும் அபரிமிதமான திருப்தியை அளிக்கும் என்று அவர் கூறினார்.
நம்பிக்கை மையங்கள் புத்துயிர் பெறுவதைப் பற்றிக் குறிப்பிடுகையில், மலைப்பாங்கான பகுதிகளில் "வாழ்க்கை வசதிக்கு" இது உதவும் என்றும் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் மோடி கூறினார்.
ரயில், சாலைகள் மற்றும் ரோப்வேகள் அவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொண்டுவருகின்றன மற்றும் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. இந்த வசதிகள் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, மலைப்பாங்கான பகுதிகளில் போக்குவரத்தை எளிதாக்குகிறது.
இந்த கடினமான பகுதிகளில் தளவாடங்களை மேம்படுத்த ஆளில்லா விமானங்களும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
முன்னதாக, கேதார்நாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப்பில் ரோப்வே திட்டங்கள் உட்பட ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
21 ஆம் நூற்றாண்டின் இந்தியா இரண்டு முக்கிய தூண்களில் சிறந்து விளங்கும் என்று அவர் கூறினார்: முதலாவது, நமது பாரம்பரியத்தில் பெருமை, இரண்டாவதாக, வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும். இன்று உத்தரகாண்ட் இந்த இரண்டு தூண்களையும் பலப்படுத்தி வருகிறது.
சோம்நாத் கோவில் மற்றும் ராமர் கோவில் கட்டும் போது என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்... இதற்கு பின்னால் முந்தைய அரசுகளின் சுயநலம் இருந்தது.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது கலாச்சாரத்தின் சக்தியை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். ஆன்மிக தலங்கள் வெறும் கட்டமைப்புகள் அல்ல, ஆனால் நமக்கு ஒரு உயிர் சக்தி என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இன்று, முழு நாடும் நமது ஆன்மீக மையங்களில் பெருமை கொள்கிறது, இந்த மாற்றத்திற்கு உத்தரகாண்ட் நிலம் சாட்சியாக உள்ளது, என்று அவர் கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலம் மீதான பிரதமரின் ஆர்வம் மற்றும் வழிகாட்டுதலுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி நன்றி தெரிவித்தார்.
1999 ஆம் ஆண்டு அயோத்திக்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த தாமி, ராமர் "கூடாரத்தில்" இருப்பதைக் கண்டு சோகமாக இருந்ததாக கூறினார். அங்கு நீண்ட நாட்களாக எந்தக் கோயிலும் கட்டப்படவில்லை என்பது வருத்தமாக இருந்தது. இன்று, மோடி தலைமையில் அங்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு காசிக்கு சென்ற நான், இப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விஸ்வநாதரை தரிசிக்க முடியும் என்பதை பார்த்தேன், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“