தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (என்சிடிஆர்சி) தபால் துறையின் சேவை குறைபாட்டால் எழுத்து தேர்வை தவறவிட்ட வழக்கில், பயனருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பளித்துள்ளது.
இந்த அபராதத் தொகையை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் சட்ட உதவி கணக்கில் டெபாசிட் செய்யுமாறும் தபால் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
முழுவிவரம்:
கருலியா நகராட்சி எழுத்துத் தேர்வு(14-04-2018) அழைப்பு கடிதத்தை 06-04-2018 அன்று பதிவு அஞ்சல் மூலம் வேட்பாளருக்கு அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த பதிவு அஞ்சல் 23-04-2018 அன்று தான் பயனரின் கைக்கு கொடுக்கப்பட்டிருகிறது (அதாவது, அனுப்பப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு).
அஞ்சல் துறையின் தாமதத்தால் வேலையை பறிகொடுத்த பயனர், சேவையின் குறைபாடு காரணமாக தனக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் காயத்தை ஈடுசெய்ய மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகினார்.
மாவட்ட மன்றம் என்ன கூறியது?
பதிவு அஞ்சல் தாமதமான ஒரே காரணாத்தால் , “கருலியா நகராட்சியின் கீழ் மஜ்தூர் பதவிக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்பை புகார்தாரர் தவறவிட்டார்” என்பதை மாவட்ட மன்றம் உறுதி செய்தது.
மேலும், "ரூ .1,00,000 / - (ஒரு லட்சம் ) இழப்பீடும், ரூ .5,000 / - (ஐந்தாயிரம் ) வழக்கு செலவாகவும், 30 நாட்களுக்குள் புகார்தாரருக்கு தபால் துறை செலுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டது.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் :
மாவட்ட மன்றத்தின் உத்தரவையடுத்து, தபால் துறை மாநில ஆணையத்தை அணுகியது. மனுவை விசாரித்த ஆணையம், கீழ் மன்றம் அளித்த முடிவில் "பிழை" இல்லை என்று கூறி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
என்.சி.டி.ஆர்.சி என்ன கூறியது?
மாநில ஆணையமும் கைவிட்டதையடுத்து, இந்திய தபால் துறை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் சென்றது.
மனுவை விசாரித்த தேசிய ஆணையம் தனது உத்தரவில்; தபால் சேவைகளுக்கு பணம் செலுத்திய புகார்தாரர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் அர்த்தத்திற்குள் ஒரு ‘நுகர்வோர்’ தான் என்று கூறிய தேசிய ஆணையம், 17 நாட்களுக்குப் பிறகு பதிவு அஞ்சல் வழங்கப்பட்ட செயல் ‘சேவையின் குறைபாடு’ என்று தான் பொருள்கொள்ளப்படும் என்றும் விளக்கம் அளித்தது.
தபால் துறையின் மேல்முறையீட்டு மனுவை தேசிய ஆணையம் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் , "மேல்முறையீட்டு மனுவிற்கு இது தகுயற்றது" என்றும் குறிப்பிட்டது.
தபால்துறையில் முறையான மேம்பாட்டையும், அதிகாரிகளின் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க, தபால் துறை அடுத்த நான்கு வாரங்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயை மாவட்ட நுகர்வோர் மன்றத்தின் சட்ட உதவி கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.