மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர் மட்டக் குழு, 2020ம் ஆண்டுல் இயற்கை பேரிடர்களை சந்தித்த தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு ரூ.3,113 கோடி பேரிடர் நிவாரணமாக அளிக்க சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
"தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து (என்.டி.ஆர்.எம்.எஃப்) மத்திய அரசின் கூடுதல் உதவியை ஆந்திரா, பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் வெள்ளம், புயல் (நிவர் மற்றும் புரெவி) மற்றும் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஆந்திரா ரூ.280.78 கோடியும், பீகார் ரூ.1,255.27 கோடியும் பெறும்.
தமிழகம் ‘நிவர்’ புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், ‘புரெவி’ புயல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் பெறும். இதன் மூலம் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.286.91 கோடி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் பாதிப்புக்காக புதுச்சேரி யூனியர் பிரதேசம் ரூ.9.91 கோடி பெறும்.
காரீப் பருவத்தில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசம் ரூ.1,280.18 கோடி பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநில அரசாங்கங்களிடமிருந்து அறிக்கை பெறப்படுவதற்குக் காத்திருக்காமல், பேரழிவுகளுக்குப் பின், மத்திய உள்துறை அமைச்சகக் குழுவை (ஐ.எம்.சி.டி) மத்திய அரசு உடனடியாக நியமித்தது.
மத்திய அரசின் கூடுதல் உதவிக்கு ஒப்புதல் அளிக்கும் அதே நேரத்தில், இந்த இயற்கை பேரழிவுகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட ஆந்திரா, பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேச மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 2020-21 நிதியாண்டில், மாநில அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எம்.எஃப்) 28 மாநிலங்களுக்கு ரூ.19,036.43 கோடியையும், என்.டி.ஆர்.எம்.எஃப்-ல் இருந்து 11 மாநிலங்களுக்கு ரூ.4,409.71 கோடியையும் வெளியிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"