பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள ஹாஸ்டல் அறையில் எரிந்த நிலையில் ஓ.எம்.ஆர் (OMR) தாள்கள், தேர்வுக்கான சில அனுமதி அட்டைகள் மற்றும் ரூ.2.75 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, பீகாரின் ஆர்யபட்டா அறிவுப் பல்கலைக்கழகம் (AKU) நீட் முதுகலை தேர்வு தேதியை ஒத்திவைத்துள்ளது. வினாத்தாள் கசிந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: NEET PG exam postponed by Bihar university after seizure of admit cards, OMR sheets in hostel room
காவல்துறையின் கூற்றுப்படி, பாட்னா மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர் அஜய் குமார் சிங் முறைகேடாக தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து இவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரியில் எம்.சி.எச் பெற்ற அஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த பிறகு, பாட்னா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வித்யாபதி சௌத்ரி, வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
இளங்கலை நீட் (NEET UG) தேர்வு வினாத்தாள் கசிந்த சில மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ள நிகழ்வுகள், முதுநிலை நீட் தேர்வுகளை ஜனவரி 16 க்கு ஒத்திவைக்க ஆர்யப்பட்டா பல்கலைக்கழகத்தை தூண்டியது. தேர்வு முதலில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட திட்டமிடப்பட்டது.
”500 மற்றும் 100 ரூபாய் மதிப்புள்ள ரூ.2.75 லட்சம் மதிப்பிலான எரிந்த கரன்சி நோட்டுகள், நீட் யு.ஜி மற்றும் பி.ஜி தேர்வின் 40 அட்மிட் கார்டுகள், ஆர்யப்பட்டா பல்கலைக்கழகம் நடத்திய எம்.பி.பி.எஸ் தேர்வுகளின் 30 ஓ.எம்.ஆர் தாள்கள், சிம்முடன் கூடிய மொபைல் போன் மற்றும் மதுபான பாட்டில் ஆகியவற்றை பாட்னா மருத்துவக் கல்லூரியின் சாங்க்யா விடுதியில் கண்டுபிடித்தோம்,” என்று பாட்னாவின் பிர்பஹோர் காவல் நிலைய பொறுப்பாளர் முகமது அப்துல் ஹலீம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, சமஸ்திபூரைச் சேர்ந்த அஜய், 2016 முதல் சாணக்யா விடுதியில் தங்கி வந்தார், மேலும் அஜய் 2022 இல் பட்டம் பெற்ற பிறகும் அங்கேயே தங்கி வந்துள்ளார்.
"விடுதியின் இரண்டு அறைகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன... நீட் யு.ஜி தாள் கசிவு வழக்கில் அஜய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ளாரா என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம், இந்த வழக்கு தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று பாட்னா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆர்யப்பட்டா பல்கலைக்கழகம் இந்த சம்பவத்தை அறிந்தது, அதன் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ராஜீவ் ரஞ்சன், கல்லூரி இப்போது அதன் சொந்த சுயாதீன விசாரணையை நடத்துகிறது என்று கூறினார்.
கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் யு.ஜி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது, விசாரணையில் பீகார் வினாத்தாள் கசிவின் மையமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கை ஜூன் 25ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.