வரும் ஆண்டு முதல் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக கட்டாயமாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு மையங்கள் வெளி மாநிலங்களிலும் மையக்கப்பட்டன. இதையும் சற்றும் எதிர்ப்பார்க்காத தமிழக மாணவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகின. அதே போல் நீட் நுழைவுத் தேர்வில் சிபிஎஸ்இ தேர்வு பாடங்களில் இருந்து அதிகளவு கேள்விகள் கேட்கப்படுவதாகவும் அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்து வருகின்றன.
நடந்து முடிந்த நீட் நுழைவு தேர்வில் நாடு முழுவதும் 136 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,255 தேர்வு மையங்களில் சுமார் 13 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் என வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் வினாத்தாளில் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசிடம் மொழிபெயர்ப்பு உதவி கோரப்படும். நீட் தேர்வு நடத்துவது மட்டுமே சிபிஎஸ்இயின் வேலை. தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் நிலை இனி ஏற்படாது. மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும்.நீட் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்தந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ” என்று கூறியுள்ளார்.