இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4 ஆம் தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர். இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேரம் இழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது. இதுவும் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: NEET UG 2024 SC Hearing Live Updates
இவ்வாறு பல்வேறு முறைகேடு புகார் கிளம்பியதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும், இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த முறைகேடு விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. மேலும் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கடந்த மாதம் 23 ஆம் தேதி அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 1 ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் புதிய தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப்பட்ட பட்டியலின்படி, முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 61ஆக குறைந்தது.
இதனிடையே, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை மத்திய அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன்படி பல்வேறு வழக்குகள் பதிவு செய்த அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சோதனை, கைது என அடுத்தடுத்து நடவடிக்கைகள் வேகமெடுத்தது. குறிப்பாக ஜார்கண்ட், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமானோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்பதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீட் விவகாரமே நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மாணவர்களுக்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்து இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வது அறிவுப்பூர்வமாக இருக்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள 30-க்கு மேற்பட்ட வழக்குகள் கடந்த 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
விசாரணை தொடங்கியதுமே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ஒருவர், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, விடைத்தாள் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் அதிகமாக நடந்துள்ளதால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், தேர்வை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டனர்.
அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை கடந்த 11ம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் அதற்குமுன் இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீண்டும் விசாரணை - திட்ட வட்டம்
இந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 18) மீண்டும் விசாரித்து வருகிறது. நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் வழக்கு விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணைக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். வினாத்தாள் கசிவு ஒட்டு மொத்த தேர்வ்வையும் எந்த வகையில் பாதித்தது என்பதைக் கூற வேண்டும்" என்று நீதிபகள் கூறினர்.
'ஒட்டு மொத்த தேர்வு முறையும் பாதிப்பு எனத் தெரிந்தால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்.' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 'வினாத்தாள் கசிவு, நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வை ரத்து செய்யலாம்' என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
'ஒட்டுமொத்த நபர்களுக்கும் மறுதேர்வு நடத்த நாங்கள் கேட்கவில்லை. சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தினால் போதும்' என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதிகள், "தேர்வு நகரங்களை மாற்றிய மாணவர்களில், எத்தனை பேர் முதல் 1,08,000 பேர் பெற்றுள்ளனர்?, ஏப்ரல் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் பதிவு செய்தவர்களுக்கு ஆதரவாக ஏதேனும் செய்யப்பட்டு உள்ளதா? என்று தேசிய தேர்வு முகாமைக்கு கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.