Milind Ghatwai
நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பெரிய மருமகள் (grand niece) ராஜ்யஸ்ரீ சவுத்ரி, குவாலியரில் நாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் படத்துக்கு , குவாலியரில் நேதாஜியின் மருமகளும், அகில பாரதிய இந்து மகாசபையின் தேசிய தலைவருமான ராஜ்யஸ்ரீ சவுத்ரி அஞ்சலி செலுத்தினார்.
ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி, அகில பாரத இந்து மகாசபையின் தேசிய தலைவர் ராஜ்யஸ்ரீ சவுத்ரி மற்றும் தேசிய செய்தித்தொடர்பாளர் நிஷா கடோச், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தவுலத்கஞ்ச் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த நாதுராம் கோட்சேவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் மரணத்திற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.
குவாலியரில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை பரப்பும் வண்ணம் அது மட்டுமல்லாது, இந்திய பிரிவினைக்கு மகாத்மா காந்தியே காரணம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரதிகளை இந்து மகாசபையினர் விநியோகித்ததாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்து மகாசபையின் செய்தித்தொடர்பாளர் நரேஷ் பாதம் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. நரேஷ் பாதம் உள்ளிட்டோர் தலைமறைவாகி உள்ள நிலையில், இந்து மகாசபை அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த களேபரத்தினிடையே, நேதாஜியின் மருமகளும், அகில பாரதிய இந்து மகாசபை தேசிய தலைவருமான ராஜ்யஸ்ரீ சவுத்ரி, கோட்சேவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.