இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலின் போது, பிறந்த குழந்தைக்கு தாக்குதல் நடத்திய விமானத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மூ - காஷ்மீர் மாநிலம் புல்மாவாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பாலகோட்டிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இதில் மிராஜ்-2000 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்தியாவின் இந்த விமானப்படை தாக்குதலை பலரும் கொண்டாடினர். இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம், நவ்கவுர் மாவட்டம், தாப்தா கிராமத்தைச் சேர்ந்த, மகாவிர் சிங், சோனம் சிங் தம்பதிக்கு, பாலகோட் தாக்குதல் நடந்த அதே நேரம், அதிகாலை 3.30 மணிக்கு குழந்தை பிறந்தது. தாக்குதல் நடத்திய விமானத்தின் பெயரோடு, மிராஜ் சிங் ரத்தோர் என தங்களது குழந்தைக்கு பெயரிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளானர் சிங் தம்பதியினர்.