New Parliament building : 10ம் தேதி அன்று 64,500 சதுர மீட்டரில் அமைய இருக்கும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் இதர கேபினட் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.
வடிவமைப்பு
முக்கோண வடிவில் அமைய இருக்கும் இந்த கட்டிடத்தில் மக்களவைக்காக 888 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் 552 இருக்கைகள் மட்டுமே உள்ளது. மாநிலங்களவைக்கு 384 இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அவை உறுப்பினர்களும் அமரும் வகையில் மாநிலங்களவையில் கூடுதலாக இருக்கைகள் உருவாக்கப்படும். அங்கு மட்டும் 1272 நபர்கள் இனி அமர முடியும்.இதற்காக ஆகும் செலவாக ரூ. 971 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை இந்தியாவின் தேசிய பறவையான மயிலை பிரதிபலிக்கும் வகையிலும் , மாநிலங்களவை இந்தியாவின் தேசிய மலரான தாமரையை பிரதிபலிக்கும் வகையிலும், மத்திய அரங்கு (Central Lounge) தேசிய மரம் ஆலமரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை கட்டும் உரிமையை பெற்றுள்ளது டாட்டா நிறுவனம். எச்.சி.பி. டிசைன், ப்ளானிங் மற்றும் மேனேஜ்மெண்ட் இந்த கட்டிடத்தை வடிவமைக்க உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டை நினைவூட்டும் வகையில் அக்டோபர் 2022ல், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது இந்த கட்டிடம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பேச்சு
அடிக்கல் நாட்டு விழாவில் கர்நாடகாவின் ஸ்ரீங்கேரி சாரதா பீடத்தில் இருந்து வந்த வேத விற்பன்னர்கள் பூஜை நடத்தினர். பிறகு அனைத்து மத பிராத்தனைகள் நடத்தப்பட்டது. அடிக்கல் நாட்டு விழா முடிவடைந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்த கட்டிடம் அனைத்து இந்தியர்களின் கனவுகளையும், இன்றைய இந்தியாவின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படும் என்று கூறினார். இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு, நம்முடைய ஜனநாயகத்தில் மிக முக்கியமான பங்கை ஆற்றியது தற்போதைய நாடாளுமன்றம். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் சில மாற்றங்களை நாம் உருவாக்கினோம். இருப்பினும் கட்டிடத்திற்கும் ஓய்வு தேவையாக இருக்கிறது என்று கூறினார்.
இந்த கட்டிடம் கட்டப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், பூமி பூஜை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயகத்தின் மீது ஏறி நின்று இந்த கட்டிடத்தை கட்டுகிறது பாஜக என்று குற்றம் சாட்டினர். பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டமும், கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் நஷ்டமடைந்து மக்கள் அவதியுற்று வரும் நிலையும் உருவாகியுள்ள போது பிரதமர் அது குறித்து எதுவும் பேசாமல் இருப்பது அயற்ச்சியை உருவாக்குகிறது என்றும் பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் முன் வைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil