சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்குச் செல்லும் முதல் விரைவு ரயில் சேவை இன்று தொடங்குகிறது. ராஜஸ்தானில் இருந்து புறப்படும் இந்த ரயில் புதன் கிழமை சென்னை வந்தடையும். பின்னர் சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வாரம் ஒருமுறை ‘ஹம்சஃபர் விரைவு ரயில்’ இயக்கப்படும்.
பொதுமக்கள் கோரிக்கை மற்றும் மத்திய அரசு திட்டமிட்டபடி வட மாநிலங்களுக்கு நேரடி ரயில்கள் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது போல, ராஜஸ்தான் பகுதியில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்காக இந்த ரயில் இயக்கப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து தாம்பரம் வரை இயங்கும் இந்த விரைவு ரயில் இன்று ராஜஸ்தான் பகுதியில் இருந்து புறப்படும். இந்தத் தொடக்க விழாவை ரயில்வேத்துறை அமைச்சர் ராஜேந்த் கோஹெயின் நடத்தி வைக்கிறார்.
ரயில் விவரங்கள்:
ராஜஸ்தானில் இருந்து மத்திய அமைச்சர் கொடியசைத்து துவங்கும் ‘பகத்-கி-கோட்டி’ ரயில், புதன்கிழமை தாம்பரத்தை வந்தடைகிறது. இன்று மதியம் 1 மணிக்கு ராஜஸ்தானில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். பிற நாட்களில் ராஜஸ்தான் ரயிலான ‘ஹம்சஃபார் விரைவு ரயில்’ சென்னை எழும்பூரில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை இயக்கப்படும்.
பிற மாவட்டங்களைச் சேர்ந்தோரும் இந்தச் சேவையை பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. தற்போது, மன்னார்குடியில் இருந்து எழும்பூர் வருவதற்கு ரயில் இயக்கப்பட்டு பின்னர் எழும்பூரில் இருந்து ராஜஸ்தானிற்கு விரைவு ரயில் செல்லும்.
சென்னையில் இருந்து நேரடியாக ராஜஸ்தான் செல்ல திட்டமிடும் மக்கள் எழும்பூரில் இருந்து சனிக்கிழமை புறப்படும் ரயில் சேவையை உபயோகிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.