தேசிய புலனாய்வு முகமை எனும் என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மாநிலங்கள் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இருவரும் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்தனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இன்று தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதா (National Investigation Agency (Amendment) Bill, 2019) நாடாளுமன்றத்தில் அறிமுகமாகிறது. அது விசாரிக்கத்தக்க குற்றங்களின் பட்டியலில் பின்வரும் குற்றங்கள் சேர்க்கப்படவுள்ளன. பயங்கரவாதக் குற்றங்களை விசாரிப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இப்போது தனது அதிகார வரம்பை விரிவுபடுத்துகிறது. ஆள் கடத்தல், கள்ள நோட்டுகளை விநியோகித்தல் முதலானவை எப்படி பயங்கரவாதக் குற்றங்களாகும்? ஆயுதம் தயாரிப்பது, வெடிமருந்து சட்டத்தின் கீழான குற்றங்கள் முதலானவை ஏற்கனவே மாநில அரசின் விசாரணை வரம்புக்குள் உள்ளன.
இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் தற்போது மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்கிறது. மாநிலங்களிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கும் அதிகாரத்தையும் இந்த சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.