தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக டில்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அண்மையில், கேரளாவில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக கருதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் இளைஞர்கள் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு பணம் திரட்டுவது மற்றும் அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவையிலும் சென்னையிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் வஹாபி இஸ்லாம் என்கிற இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கருதி டில்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் நாகையில் சோதனை நடத்தினர். சென்னை மண்ணடி, லிங்கி செட்டி தெரு மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்பின் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் திரட்டுவது மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி டில்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை டில்லியில் இருந்து விமானம் மூலம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வர தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.