nipah virus symptoms: கேரள மக்களை கலக்கத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்கியிருக்கிறது நிபா வைரஸ் தாக்குதல்.
கடந்த ஆண்டு கேரளா மக்களை உலுக்கி எடுத்த நிபா வைரஸ் மீண்டும் இந்த வருடம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்குதலால் 17 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நிபா பரவியது மேலும் அச்சத்தைக் கூட்டியது.
மக்களின் பதற்றம் மற்றும் பீதியை குறைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் துரித நடவடிக்கைகளால் நிபா வைரஸை விரட்டி அடித்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த இளைஞரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞருக்கு நிபா வைரஸ் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அந்த இளைஞர் பயிற்சி வகுப்புக்காக அருகில் உள்ள மாவாட்டத்திற்கு சென்றதாகவும் அங்கு அவருக்கு காய்ச்சல் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லையென ஆய்வில் தெரியவந்ததுள்ளது.
மீண்டும் நிபா வைரஸ் தாக்குதலால் கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவர்கள் மற்றும் சுகாத்துறை எச்சரித்துள்ளது.நிபா வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேரள அரசு எச்சரித்துள்ளது.
நிபா வைரஸ் பரவுதல் :
இந்த வைரஸானது வெளவால், அணில் மூலம் பரவுகிறது. அணில் எச்சை செய்த பழங்களை உண்ணக்கூடாது. மேலும், மாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை தண்ணீரில் கழுவாமல் உண்ணக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வெளவால்களில் கழிவு மூலம் நிபா வைரஸ் வேகமாக பரவுவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, இருமல், மூளைக்காய்ச்சல், கண் எரிச்சல், தொண்டை வலி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.