வரலாற்றில் முதல் முறையாக மந்தநிலைக்குள் நுழைந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தார். மேலும், சுயசார்பு திட்டத்தின் கீழ், 26 துறைகளில் ரூ .2,65,080 கோடி மதிப்புள்ள மூன்றாம் கட்ட நிதி தொகுப்பை வெளியிட்டார்.
தற்சார்பு இந்தியாவின் கீழ், இதுவரை அறிவிக்கப்பட்ட மொத்த தொகுப்பு நிதி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்துக்கு நிகரானது என்று தெரிவித்த அவர், இதில் அரசு பங்களிப்பு 9 சதவீதம் என்றும் கூறினார்.
அறிவிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள்:
வலுவான பொருளாதார வளர்ச்சியால் புத்தாக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த சீதாராமன் “சுயசார்பு இந்தியா ரோஜ்கார் யோஜனா” எனும் திட்டத்தை அறிவித்தார். வேலைவாய்ப்பை உருவாக்கும், வேலை வழங்குபவர்களை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பான 24 சதவீதத்தை (12% ஊழியர்கள் பங்கு மற்றும் 12% முதலாளிகள் பங்கு) மத்திய அரசு பங்களிக்கும்.
இந்த நடவடிக்கை, அனைத்து துறைகளிலும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் புதிகாக பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கும், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா பொது முடக்கநிளையால் வேலையிழந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்.
கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க, நடப்பு நிதியாண்டில் கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்திற்கு கூடுதலாக 10,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சீதாராமன் அறிவித்தார். நடப்பு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.1,01,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காமத் குழுவின் பரிந்துரை அடிப்படையில், அழுத்தம் நிறைந்த 26 துறைகளில் தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ``அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம்'' அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் 61 லட்சம் கடன்தாரர்களுக்கு மொத்தம் ரூபாய் 2.05 லட்சம் கோடி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 1.52 லட்சம் கோடி வழங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தைய சவால்கள் இருந்தபோதிலும், நாடு முழுக்க பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித்திட்டத்தில் 18 லட்சம் வீடுகளைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது என்று குறிப்பிட்ட நிதி அமைச்சர், இந்த திட்டத்திற்கு தற்போது கூடுதலாக ரூ .18,000 கோடி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.